புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இதில் மாதவன் (வயது 21), வீரமணி (44), அறிவழகன் (35), தாமரைச்செல்வன் (38), முத்துப்பாண்டி (45) உள்பட 24 மீனவர்கள் 5 விசைப்படகுகளில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 5 விசைப்படகுகளை பறிமுதல் செய்து, 24 மீனவர்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை இலங்கையில் உள்ள மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கை கடற்படையினரால் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 24 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவ சங்க நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.