ரஷ்யாவின் நலன்களை பாதுகாக்க ஜனாதிபதி விளாடிமிர் புடின் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கிரெம்ளின் அறிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 9 மாதங்களை கடந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையே இதுவரை நேரடியாக நடத்தப்பட்ட இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் மற்றும் துருக்கியின் தலைமையில் நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை என அனைத்து தோல்வியில் முடிவடைந்த நிலையில் தற்போது மீண்டும் ரஷ்யா இதனை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ரஷ்யா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “எங்கள் இலக்குகளை அடைய, ஜனாதிபதி புடின் அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளார். “இராஜதந்திர வழிமுறைகளால் எங்கள் இலக்குகளை அடைவதே மிகவும் விரும்பத்தக்க பாதை” என கருதுவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கிட்டத்தட்ட 10 மாத காலப் போருக்குப் பிறகு ரஷ்யா உக்ரைனை விட்டு வெளியேறத் தயாரா என்ற கேள்வி கிரெம்ளின் செய்தி தொடர்பாளரிடம் கேட்கப்பட்டது, அதற்கு வெறுமனே “சிறப்பு இராணுவ நடவடிக்கை தொடர்கிறது” என பதிலளித்துள்ளார்.

மேலும் உக்ரைனில் உள்ள ரஷ்யாவின் புதிய பிரதேசங்களை அமெரிக்கா அங்கீகரிக்காததால், பேச்சுவார்த்தைகளுக்கு பரஸ்பர அடிப்படையைக் கண்டுபிடிப்பது கடினம் என்றும் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் வியாழனன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், ரஷ்ய ஜனாதிபதி-யை உடனடியாக தொடர்பு கொள்ளும் எந்த திட்டமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

ஆனால் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அவர் ஆர்வம் காட்டினால் அவருடன் பேசுவேன் எனவும், இருப்பினும் நேட்டோ நட்பு நாடுகளுடன் கலந்தாலோசித்து மட்டுமே அதைச் செய்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.