ஆந்திர மாநிலத்தில் சொந்த மகள்களை நிர்வாணப்படுத்தி கொலை செய்த வழக்கில் மன நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்த பெற்றோர், நடந்த சம்பவத்தில் குற்ற உணர்வு கொண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

படித்த தம்பதியான புருஷோத்தம் நாயுடு மற்றும் பத்மஜா ஆகியோர் ஜனவரி 24ம் திகதி தங்களது பிள்ளைகளான அலேக்கியா (27) மற்றும் சாய் திவ்யா (22) ஆகிய இருவரையும் விசித்திர காரணங்களுக்காக கொலை செய்தனர.

இந்த வழக்கில் கைதான இருவரும் ஜனவரி 26 முதல் தனித்தனியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் பத்மஜா உளவியல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறிந்த சிறை அதிகாரிகள், குறித்த தம்பதியை சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள ருயா மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அந்த தம்பதியின் தற்போதைய நிலையில் உரிய சிகிச்சைக்கு தேவையான வசதிகள் இல்லை என்பதால் ருயா மருத்துவமனை நிர்வாகம், அவர்களை விசாகபட்டணத்தில் அமைந்துள்ள அரசு உளவியல் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தது.

இந்த நிலையில் சுமார் 56 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னர், இருவரும் சாதாரண நிலைக்கு திரும்பியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.மட்டுமின்றி, ந.டந்த கொலையில் தங்களுக்கு வருத்தம் இருப்பதாகவும், குற்ற உணர்வு கொண்டுள்ளதாகவும் அந்த தம்பதி மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர்கள் பூரண குணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், மருத்துவமனையில் இருந்து அவர்களை கொண்டு செல்லலாம் எனவும் அனுமதி அளித்துள்ளனர். தற்போது அவர்களை மீண்டும் சிறைக்கு கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.