இலங்கையில் மேலும் 43 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1484 ஆக உயர்ந்துள்ளது.

மே 20ம் திகதி முதல் இன்று வரையில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன்படி, இன்று மட்டும் நான்கு கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.அந்த வகையில், மே 20ம் திகதி முதல் 30ம் திகதி வரையில் 39 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 20ம் திகதி ஆறு பேரும், 21ம் திகதி ஒருவரும், 24ம் திகதி ஒருவரும், 25 மற்றும் 26ம் திகதிகளில் தலா இருவரும், 27ம் திகதி ஆறு பேரும், 28ம் திகதி ஒன்பது பேரும், 29ம் திகதி ஆறு பேரும், 30ம் திகதி ஆறு பேரும் உயிரிழந்துள்ளனர்.இதேவேளை, இன்றைய தினம் 2,882 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 186,334 ஆக அதிகரித்துள்ளது.நாட்டில் கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 150,000 ஐ கடந்துள்ளது. இதற்கமைய, இன்று மேலும் 1,915 பேர் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்து சிகிச்சை மையங்களிலிருந்து வெளியேறியுள்ளனர்.

தொற்றுநோய் தடுப்புப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட நாளாந்த அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதன்படி நாட்டில் கோவிட் தொற்றுக்குள்ளாகி இருந்தவர்களில், 151,740 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.