ஆசிரியர்களின் சம்பளங்களை உயர்த்துவதற்கு தற்பொழுது பணமில்லை என அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

சம்பள முரண்பாடுகளை களைந்து சம்பளத்தை உயர்த்துவதற்கு போதியளவு பொருளாதார இயலுமை நாட்டில் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட நிறைவின் பின்னர் அவர் ஊடகங்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள், அதிபர்கள் சம்பள முரண்பாடு குறித்து எழுந்துள்ள பிரச்சினை எங்களுடைய பிரச்சினை கிடையாது எனவும் அது கடந்த அரசாங்கத்தின் பிரச்சினை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது பணமில்லை எனவும் இதனால் வரவு செலவுத் திட்ட சமர்ப்பிப்பின் போது இது குறித்து கவனம் செலுத்த முடியுமே தவிர தற்போதைக்கு முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் சம்பள முரண்பாடுகள் குறித்து தீர்மானிக்கப்படும் என ஆசிரியர்களிடம் கூறப்படும் கோவிட் நிலைமைகளில் தற்போதைக்கு செலுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்கள் அதிபர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமாயின் 56 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் அதனை தற்போதைக்கு வழங்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முழு உலகிலும் கோவிட் காரணமாக பொருளாதாரப் பிரச்சினை உருவாகியுள்ளது எனத் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் ஓராண்டு காலம் வீட்டில் இருந்தார்கள் நாம் அவர்களது சம்பளங்களை குறைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நிலைமை மாற்றமடைந்தால் சம்பள முரண்பாடுகளை களைவது குறித்து தீர்மானிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்சங்க போராட்டம் முன்னெடுப்பது அவர்களது உரிமை எனவும் அதனை தடுக்க முடியாது எனவும் அமைச்சுர் லொகுகே தெரிவித்துள்ளார்.