கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பல விவசாய பண்ணைகளை சிவில் பாதுகாப்பு படையணி நடத்தி வருவது உண்மையே என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது உரையாற்றிய அவர், நாட்டுக்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்குவதே இதன் பிரதான நோக்கம் என கூறினார்.

வடக்கு மாகாணத்தில் பாதுகாப்பு படைகளின் கீழ் இயங்கும் விவசாய பண்ணைகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், மன்னார் மாவட்டத்தில் வெள்ளம்குலம் பிரதேசத்தில் உள்ள நூறு ஏக்கர் நிலப்பரப்பில் இலங்கை இராணுவம் விவசாய பண்ணைகளை நடத்தி வருவதாக கூறினார்.

மேலும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதே இதன் நோக்கமெனவும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.