அமைச்சரவை அந்தஸ்துள்ள 4 அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றம் மேற்கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக அரசின் உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த தகவலின்படி எதிர்வரும் செவ்வாய்கிழமை இந்த அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தின்போது கெஹெலிய ரம்புக்வெல்ல, டலஸ் அழகப்பெரும, ஜீ.எல்.பீரிஸ் மற்றும் தினேஸ் குணவர்தன ஆகிய அமைச்சர்களின் அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதற்கமைய வெளிவிவகார அமைச்சராக பதவி வகிக்கும் தினேஸ் குணவர்தனவுக்கு கல்வியமைச்சுப் பதவியும் எரிசக்தி அமைச்சராக பதவி வகிக்கும் டலஸ் அழகப்பெருமவுக்கு ஊடகத்துறை அமைச்சுப் பொறுப்பும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறே கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு மின்சக்தி அமைச்சராகவும் கல்வியமைச்சர் ஜீ.எல். பீரிஸுக்கு வெளிவிவகார அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளதாக அரசின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த காலங்களில் ஊடகத்துறை அமைச்சர் மற்று கல்வியமைச்சர் தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்தன.

தற்போதைய கொவிட் பரவல் நிலைமைக்கு மத்தியில் கல்வி நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுத்துச்செல்ல உரிய நடைமுறையொன்றை கல்வியமைச்சர் உருவாக்க தவறியிருந்ததுடன் வேதன உயர்வுகோரி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்களின் பிரச்சினைகளை தீர்க்க கல்வியமைச்சுக்கு இயலாமல் போயிருந்தது.

இதன்காரணமாக கல்வியமைச்சர் மீது கடுமையான எதிர்ப்புகளை மக்கள் முன்வைத்திருந்தனர்.

அவ்வாறே ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அமைச்சரவை பேச்சாளராக வெளியிட்ட சில சர்ச்சைக்குரிய கருத்துகளால் அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரசுக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.