” ராஜபக்சக்கள் இல்லாத அமைச்சரவை உருவாக வேண்டும். அப்போதுதான் இடைக்கால அரசை மக்கள் ஏற்பார்கள்.” என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சந்திப்பில் பங்கேற்பதற்கு முன்னர், 11 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், சுயாதீன அணிகளின் உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது புதிய பிரதமர் ஒருவர் தலைமையில் ராஜபக்சக்கள் இல்லாத அமைச்சரவையை உருவாக்கி – இடைக்கால சர்வக்கட்சி அரசொன்றை ஸ்தாபிக்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தி அப்பதவியில் கோட்டாபய ராஜபக்ச நீடிப்பதற்கும் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.
பின்னர் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவருடனான சந்திப்பின்போதும் இவ்விவகாரங்கள் தொடர்பில் அவருக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.