நிர்ணய விலைக்கு மாறாக அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் சட்டவிரோதமான முறையில் 6 களஞ்சியசாலைகளில் பதுக்கி வைத்திருந்த சுமார் 40 இலட்சம் மெற்றிக்தொன் நெல் கைற்றப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அத்தோடு, நிர்ணய விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இருப்பினும் சதொச விற்பனை நிலையத்தின் ஊடாக அத்தியாவசிய பொருட்கள் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அரிசியின் விற்பனை விலை சர்ச்சைக்குரியதாக காணப்படுகிறது.

அரிசியின் நிர்ணய விலைக்கு மாறாக அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வதற்காக 6 களஞ்சியசாலைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 40 இலட்சம் மெற்றிக் தொன்நெல் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுப்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

கொவிட் தாக்கத்திற்கு மத்தியில அத்தியாவசிய பொருட்கள் நிர்ணய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கட்டணமில்லாமல் சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விநியோகிக்கப்படுகின்றன என்றார்.