நாடாளுமன்றத்திற்கு மீண்டும் ஒரு முறை செல்லும் நோக்கம் தனக்கு இல்லை எனவும் சட்டத்துறை தொழிலுக்கு தான் மீண்டும் திரும்ப உள்ளதாகவும் நீதியமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணி பிரேமரத்ன ஜயசிங்க எழுதியுள்ள குற்றவியல் சட்டம் தொடர்பான நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே நீதியமைச்சர் இதனை கூறியுள்ளார்.

எவர் குற்றம் சுமத்தினாலும் இலங்கை நீதித்துறை சுயாதீனமானது. நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்கும் பொறுப்பை உச்சபட்சமாக நிறைவேற்றி வருகிறேன். நாடு என்ற வகையில் இது குறித்து அனைவரும் மகிழ்ச்சியடைய முடியும்.

நீதித்துறை சுயாதீனமாக இருப்பது மட்டுமே போதுமானதல்ல. அதன் வினைதிறன் மிக முக்கியமானது.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இலங்கை தற்போது இருக்கும் இடத்தை நோக்கும் போது, எங்கோ ஓரிடத்தில் தவறு நடந்துள்ளது என்பதை எவ்வித விவாதங்களும் இன்றி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இது தொடர்பில் எவர் மீதும் குற்றம் சுமத்துவதில் பயனில்லை. இரவை சபிக்காது, இருள் விலக விளக்கொன்றை ஏற்ற வேண்டும் எனவும் அலி சப்றி குறிப்பிட்டுள்ளார்.