கொவிட் 19 கொரோனா பரவல் நிலைமையை கட்டுப்படுத்தும் பொருட்டு தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தி அடைவதை முன்னிட்டு, கொரோனாவை கட்டுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

இலங்கையில் கொவிட் 19 கொரோனா பரவலை வெற்றிகரமாக கட்டுபாட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தல், மற்றும் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின் பேரில், கொவிட் தடுப்பு சிகிச்சைகளில் ஈடுபட்ட சுகாதார பங்களிப்பாளர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அஸாத் .எம்.ஹனிபா தலைமையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியாசலையில் நேற்று நடைபெற்றது.

கொரோனா தொற்றில் மரணித்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமான இந்நிகழ்வில், வரவேற்புரையை திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஆகில் அஹ்மட் ஷரிபுத்தீன் நிகழ்த்தியதுடன், தொற்றுத் தடுப்பு பிரிவு மற்றும் பொது சுகாதார பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.எம். முபாரிஸ் கொரோனா தடுப்பு மற்றும் கொவிட் தடுப்பூசி வழங்கல் தொடர்பில் விளக்கமளித்தார்.

இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா, அக்கரைப்பற்று மாநகரசபை மேயர் அதாஉல்லா அகமட் சகி, அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும் மாநகர சபை உறுப்பினருமான “கிழக்கின் கேடயம்” செயற்பாட்டாளர் எஸ்.எம். சபீஸ், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம். எம். அன்சார், வைத்திய கலாநிதி எம்.ஏ. அப்துல் றக்கீஸ்து, பொது சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர். றிப்ஷான் ஜமீல், தர முகாமைத்துவ பிரிவின் பொறுப்பு வைத்தியர் டாக்டர் எம்.எம்.தாஸிம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த தேசிய நிகழ்வில் ஓர் அங்கமாக கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு அர்ப்பணிப்புக்களை செய்த சுகாதார துறையினர் பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.