எதிர்வரும் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் அனுராதபுரம் சல்காடு மைதானத்தில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் இன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இது குறித்து இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டது.

பேரணியை ஒழுங்கமைப்பதற்காக வழிநடத்தல் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார, தவிசாளர் சரத் பொன்சேகா, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஹரின் பெர்னாண்டோ மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

பொதுஜன பெரமுன நடத்திய சல்காடு பேரணிக்கு சவாலாக இதே மைதானத்தில் மேலும் வெற்றிகரமான பேரணியை நடத்த தயார் என ஐக்கிய மக்கள் சக்தி பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இந்த பேரணியுடன் இணைந்து கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகளை வலுப்படுத்தும் விசேட வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு தயாராக இருக்குமாறு கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச செயற்குழு உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.