ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட்டின் இலங்கை தொடர்பான எழுத்து மூல சமர்ப்பணம், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது, பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் சிறந்தது என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் தெரிவித்துள்ளார். என்ற போதிலும், பயங்கரவாத தடைச்சட்டத்தில் இன்னும் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அவர் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் கடந்த சில வருடங்களாக பொறுப்புக்கூறலுக்கான முன்னேற்றத்தில் பின்னடைவில் உள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், சிவில் அரசாங்கத்திற்குள் இராணுவமயமாக்கல் அதிகரித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

மனித உரிமைகள் தொடர்பிலான ஆணைக்குழு உள்ளிட்ட ஏனைய ஆணைக்குழுக்களின் சுயாதீனம் படிப்படியாக குறைவடைந்து செல்வவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கும் மனித உரிமைகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறித்து தனக்கு அறிக்கை கிடைத்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ், நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, வெளிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன ஆகியோர் இம்முறை ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரில் கலந்து கொண்டுள்ளனர்.