புதிய பிரதமர் ஒருவருடன் கடமையாற்ற தயாராகுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச அலரி மாளிகையின் சமையல் அறையின் ஊழியர்களிடம் கூறியுள்ளதாக சில இணையத்தள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அலரி மாளிகையின் சமையல் அறைக்கு நேற்று சென்ற பிரதமர், அங்கு ஊழியர்களுடன் கலந்துரையாடியுள்ளதுடன் எதிர்வரும், தமிழ் – சிங்கள புத்தாண்டின் பின்னர் புதிய பிரதமர் ஒருவர் அலரி மாளிகைக்கு வருவார் எனக் கூறியதாக அந்த செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

தனக்கு சேவையாற்றியது போல், புதிய பிரதமருக்கு சிறப்பாக சேவையாற்றுமாறு பிரதமர் ஊழியர்களிடம் கோரியுள்ளார்.

நாடு தற்பொழுது எதிர்நோக்கியுள்ள நெருக்கடியில் இருந்து காப்பாற்றுவதற்காகவே புதிய பிரதமர் நியமிக்கப்படவுள்ளதாகவும் அதில் எவ்வித அரசியல் மோதல்களும் இல்லை எனவும் பிரதமர் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் புதிய பிரதமர் நியமிக்கப்படவுள்ளதாக இணையத்தள ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ள போதிலும் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அலுவலகம் இந்த செய்தியை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.