நெருக்கடிக்கு தீர்வு கிட்டுமா…. நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அமெரிக்காவிற்கு செல்லத் தயாராகிவருவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே அடுத்த வாரமளவில் வொஷிங்டன் செல்லவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், ஏப்ரல் 8 ஆம் திகதி புறப்பட்டு, ஏப்ரல் 11 ஆம் திகதி சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளைச் சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் அவரின் அமெரிக்கப் பயணம் தொடர்பில் நிதியமைச்சு எந்தவிதமான தகவல்களையும் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தற்போது கடுமையான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைப்பது சாதகமான சூழல் ஏற்படுமா என்றும், நெருக்கடியை சமாளிக்கும் வாய்ப்பு கிட்டுமா என்பது தொடர்பில் எதிர்பார்ப்புக்கள் ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதற்கிடையில், இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்துள்ள சூழ்நிலையில் அரசாங்கம் மாற்று முடிவுகளை எடுத்தாக வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.