இலங்கையில் தற்போது 2 லட்சத்து 783 ஆக இருக்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கை 2024 ஆகும்போது ஒரு லட்சத்து 35 ஆயிரமாக குறைக்கப்படவுள்ளது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

” இராணுவத்தின் பலம் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி ஆகியன ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போன்றன. அவை ஒன்றாக இருந்த போதிலும் ஒன்றுடன் ஒன்று வெளிப்படையாக தென்படுவதில்லை.

இராணுவச் செலவினம் என்பது தேசிய மற்றும் மனிதப் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம், பொருளாதார வளர்ச்சிக்கான வழிகளை ஏற்படுத்தும் மறைமுகமாகத் தூண்டப்படும் ஒரு அரச செலவினமாகும். ” – எனவும் அவர் கூறினார்.

இராணுவத்தின் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் தற்போது 2 லட்சத்து 783 ஆக இருந்தாலும், அது 2024 ஆம் ஆண்டளவில் ஒரு லட்சத்து 35 ஆயிரமாக குறைக்கப்பட்டு 2030 ஆம் ஆண்டளவில் அது ஒரு லட்சமாக சரி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு இணையாக எந்தவொரு பாதுகாப்பு சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் தொழில்நுட்ப ரீதியாகவும் தந்திரோபாய ரீதியாகவும் தகுதியான சமநிலையான இராணுவப் பலத்தை உருவாக்குவதே இந்த மூலோபாயத் திட்டத்தின் நோக்கமாகும்.” – எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.