அடுத்த மாத இறுதிக்குள் நாட்டில் மரக்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என மரக்கறி வியாபாரிகள் மற்றும் பொருளாதார மத்திய நிலைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொருளாதார மையங்களுக்கும் நேற்று மட்டுப்படுத்தப்பட்ட மரக்கறி கையிருப்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் பாரிய சிரமங்களை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும் என தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் விலை உயர்வால் பொருளாதார மையங்களுக்கு லொறிகள் வராததால் பல மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளன.
எரிபொருள் விலை அதிகரிப்பு, பயிர்ச்செய்கையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், விவசாயிகள் குறைந்த அளவிலான காய்கறிகளை மட்டுமே பொருளாதார மையங்களுக்கு கொண்டு வந்துள்ளனர். இதனால் நேற்று காய்கறிகளின் மொத்த விலையும் உயர்ந்து காணப்பட்டது.
ஒரு கிலோ உருளைக்கிழங்கின் மொத்த விலை 300 ரூபாவாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ காய்ந்த மிளகாய் மொத்த விற்பனை விலை ரூ.1600 ஆக இருந்தது. ஒரு கிலோ போஞ்சி மொத்த விற்பனை விலை 450 ரூபாவாக இருந்தது.
எதிர்வரும் நாட்களில் மரக்கறிகளின் விலை மேலும் உயரும் என பொருளாதார மையம் அதிகாரிகள் தெரிவித்துளனர்.