இலங்கையில் நாளாந்தம் 55 பேர் மரணத்தைத் தழுவுவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
புகைத்தல் பாவனையின் காரணமாக இவ்வாறு அவர்கள் உயிரிழப்பதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஆண்டுக்கு சுமார் 20,000 இலங்கையர்கள் மரணிப்பதாகவும் யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பால் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 31 ஆம் திகதி சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு இருப்பதுடன் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்தவகையில் இந்த ஆண்டு உலக புகையிலை எதிர்ப்பு தினம் ‘சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்’ என்ற கருப் பொருளில் இடம்பெறவுள்ளது.
புகைப் பொருள் பாவனையானது சூழலை மாசடையச்செய்யும் பிரதான காரணிகளில் ஒன்றாகும். குறிப்பாக, சிகரெட் தயாரிப்பதற்கு உலகளாவிய ரீதியில் சுமார் 600 பில்லியன் மரங்கள் வருடாந்தம் வெட்டப்படுகின்றன.
சுமார் 84 பில்லியன் தொன் காபன் டயொக்சைட் துணிக்கைகள் சூழலில் சேர்வதனால் புவியின் வெப்பநிலை அதிகரிக்கப்படுகின்றது.
மேலும் வருடாந்தம் சிகரெட் தயாரிக்க சுமார் 22,000 பில்லியன் லீற்றர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
புகையிலை உற்பத்தியினால் 2 மில்லியன் டொன் கழிவுகள் தேங்குகின்றன. நாடு தற்போது பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.
அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்து கொள்வதற்கு தேவையான டொலர்கள் பற்றாக்குறை காணப்படும் இந்த தருணத்திலும் வீணாக சிகரெட்டிற்கு செலவழிக்கபடுவதால் எஞ்சி இருக்கின்ற டொலர்களும் வீணடிக்கப்படுகின்றன.
மேலும் சிகரெட் நிறுவனத்திடம் வரி அறவிடப்பட்டாலும் அந்த தொகையையும் விட பாரிய தொகை புகைத்தலினால் ஏற்படும் பாதிப்புக்களிற்கு செலவிடப்படுகிறது.
அனைத்து அத்தியாவசியமான பொருட்களின் விலைகளும் சடுதியாக உயர்வடைந்த போதிலும் சிகரெட்டிற்கான விலை மிகவும் குறைவான சதவீதத்திலேயே அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.
தற்போதைய பணவீக்கத்திற்கு ஏற்ப சிகரெட் விலை அதிகரிகரிக்கப்படவில்லை என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.