அமெரிக்காவில் உள்ள பாடசாலை ஒன்றில் திடீர் துப்பாக்கிச் சூட்டில் மாணவர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு சியாட்டிலில் உள்ள பாடசாலை ஒன்றில், காலை 9.55 மணியளவில் திடீர் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் மாணவர் ஒருவர் படுகாயமடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, காயமடைந்த மாணவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பிற மாணவர்களின் பாதுகாப்புக்காக பாடசாலை பூட்டப்பட்டது.

பின்னர் பாடசாலை முழுவதும் பொலிஸார் சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. ஆனால் அவர் குறித்த தகவலை பொலிஸார் பகிர்ந்துகொள்ளவில்லை.

இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் அலறியடித்துக் கொண்டு பாடசாலைக்கு விரைந்தனர். அவர்களில் மாணவர் ஒருவரின் பெற்றோர், தன்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை என்றும், நாம் ஏன் இப்படி ஒரு சமூகத்தில் வாழ்கிறோம் என்று தெரியவில்லை என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.