உள்ளூராட்சி மன்ற தேர்தலை நிறுத்தி வைக்க, தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவு பிறப்பிக்கக்கோரி உயர்நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல் டபிள்யூ. எம். ஆர். விஜேசுந்தரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா மற்றும் அதன் உறுப்பினர்கள், பிரதமர், நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான செலவுகள் குறித்து தேர்தல் ஆணைக்குழுவிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தியதாக மனுதாரர் கூறியுள்ளார்.

அதன்படி, தேர்தலுக்கு சுமார் 10 பில்லியன் ரூபா செலவாகும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாகவும் மனுதாரர் கூறுகிறார்.

உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனு கோரல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளைய தினம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும், நிலையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.