உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்பிற்க்கான விண்ணப்பம் ஜனவரி 5 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி 23 நள்ளிரவு 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அஞ்சல் வாக்காளரின் வசதிகள் கருதி அஞ்சல் வாக்கிற்கு விண்ணப்பிக்கும் ஒருவருக்கு பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

சகல மாவட்ட செயலகங்களிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள தேர்தல் நடைபெறவிருக்கும் மாவட்டங்களிற்கு உரிய தேர்தல் இடாப்புக்கள்.

சகல பிரதேச செயலகங்களிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள குறித்த பிரதேச செயலகங்களுக்குரிய தேர்தல் இடாப்புக்கள்.

சகல கிராம அலுவலர் பிரிவுகளிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள குறித்த கிராம அலுவலர் பிரிவிற்கு உரிய தேர்தல் இடாப்புக்கள்.

தேர்தல் இடாப்புக்கள் மீளாய்வின் போது வீடு வீடாக விநியோகிக்கப்படும் பீசீ படிவத்தினுடன் காணப்படும் பற்றுச் சீட்டில் ஒட்டப்பட்டுள்ள வாக்காளர் இடாப்பின் குறித்த வீட்டிலக்கத்திற்குரிய வாக்காளர் பட்டியலின் மூலமும் தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அரச தகவல் நிலையத்தின் 1919 ஆம் இலக்க தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடிவதுடன், அங்கு குறிப்பிட்ட விண்ணப்பதாரியின் முழுப் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், வதிவிட மாவட்டம், கிராம அலுவலர் பிரிவு போன்ற விபரங்களைச் சமர்ப்பித்து வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்கெடுப்பு மாவட்டம், தொடரிலக்கம் ஆகிய தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.