இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கடந்த காலங்களில் மே தின நிகழ்வுகளை மிகவும் பிரமாண்டமாக நடத்தியுள்ளது. இதற்காக இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும் எண்ணிக்கையானோர் தூர இடங்களிலிருந்து வருகை தருவார்கள்.இதற்காக நாம் பாரியளவில் நிதியைச் செலவிட்டு வருகின்றோம்.

ஆகவே, இனிவரும் காலங்களில் மே தினத்துக்காக செலவிடும் பணத்தை தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விக்காகச் செலவிடத் திட்டமிட்டுள்ளோம் என தோட்ட வீடமைப்பு மற்று சமூக உட்கட்டமைப்புகள் வசதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின நிகழ்வுகள் கொட்டகலையில் நேற்று இடம்பெற்றது.இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்: கடந்த காலங்களில் எத்தனையோ மே தினங்களை நான் பார்த்திருக்கின்றேன்.

அதற்காகப் பாரியளவில் நிதி செலவிடப்படுகின்றது.இவ்வாறான சூழ்நிலையில் இன்று எத்தனையோ தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் கல்வியைத் தொடர முடியாதுள்ளனர்.

பலர் பல்கலைக்கழகம் சென்று படிப்பதற்கு வாய்ப்பிருந்தும் அதனைச் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பது ஒரு குடும்பம், அந்தக் குடும்பத்தில் பொருளாதார கஷ்டங்கள் இருக்கும் போது நாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.ஆகவே, அவற்றிக்குத் தீர்வு காண வேண்டும். ஆகவே, கடந்த காலங்களைப் போல் அல்லாது உங்கள் பிரச்னைகளை தீர்ப்பதற்காக எனக்கு நீண்ட பயணம் ஒன்று செல்ல வேண்டியுள்ளது.

அதற்காகத் தான் நீங்கள் எனக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளீர்கள். நிச்சயம் அதனை நான் செய்து முடிப்பேன்.கடந்த காலங்களில் தோட்டத்தில் உள்ள தலைவிகளை காங்கிரஸ் மறந்த நிலையே காணப்பட்டது. இனிவரும் காலங்களில் அவ்வாறு நடைபெறாது.காங்கிரஸின் வளர்ச்சிக்கு மூத்த தலைவர் மற்றும் தலைவிகளின் பங்கு எப்போதும் அவசியம் அத்தோடு இனிவரும் காலங்களில் காங்கிரஸின் மாவட்ட காரியாலயங்களில் மூத்த தலைவர்களுக்கு காரியாலயத்தில் சென்று ஆலோசனைகளை வழங்குவதற்கான ஆயத்தங்களை மேற்கொள்கிறோம் என அவர் தெரிவித்தார்.