பிரதமரின் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான செயலாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கான நியமனக் கடிதத்தை உதித் லொக்குபண்டார பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களினால் இன்று (09) அலரி மாளிகையில் வைத்து பெற்றுக் கொண்டார்.

உதித் சஞ்சய லொக்குபண்டார அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான விஜமு லொக்குபண்டார அவர்களின் சிரேஷ்ட புதல்வராவார். பதுளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 2009ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவான உதித் லொக்குபண்டார 2015ஆம் ஆண்டு வரை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

அமைச்சுக்களின் ஆலோசனை குழுக்கள் பலவற்றில் பிரதிநிதியாக செயற்பட்ட உதித் லொக்குபண்டார, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினராகவும் சிறிது காலம் பணியாற்றினார்.

2015ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் 5ஆவது நிறைவேற்று ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளராக சேவையாற்றிய அவர் லைசியம் சர்வதேச பாடசாலையின் பழைய மாணவராவார்.

லண்டன் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் கல்வி பயின்ற உதித் லொக்குபண்டார, லண்டன் வர்த்தக சபையில் (சேம்பர் ஒஃப் கொமர்ஸ்) சந்தைப்படுத்தல் டிப்ளோமா மற்றும் பட்டய சந்தைப்படுத்தல் முகாமைத்துவ நிபுணராகவும் செயற்பட்டுள்ளார்.