சீனா, தைவானை (Taiwan) தனது நாட்டிற்கு உட்பட்ட ஒரு பகுதியாகவே  கருதும் வேளையில்,  தைவான் தன்னை இறையாண்மை பெற்ற ஒரு தனி  நாடாகதான் கருதுகிறது. வலுக்கட்டாயமாக தைவானை தனது நாட்டுடன்  சேர்க்கவே சீனா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. சீனா மற்றும் தைவானுக்கு இடையே உள்ள அதிகாரபூர்வமற்ற எல்லையை சீனா கடப்பதை தைவான், சீனாவின்  ஊடுறுவலாகதான் பார்க்கிறது.

சில நாட்களுக்கு முன் தைவானை சீனா 2025ஆம் ஆண்டிற்குள் முழுவதுமாக கைப்பற்றி விடும் என்று தைவானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் சியு குவோ-செங் எச்சரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீனாவுடனான (China) இராணுவ பதற்றம் 40 ஆண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு தற்போது மிக மோசமான நிலையில் அதிகமாக உள்ளது என சியு குவோ-செங் மேலும் கூறினார். 

இந்நிலையில்,  சீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில், தைவான் அதிபர் சாய் இங்-வென் (Tsai Ing-wen) தனது நாடு சீனாவுக்கு பணிந்து போகாது என்று கூறியுள்ளார். “தைவான் மக்கள் சீனாவின் அழுத்தத்திற்கு அடிபணிந்து போய்விடுவார்கள் என்று எந்தவிதமான கற்பனையும் தேவையில்லை” என்று தைவான் அதிபர் கூறினார்.

கடந்த வாரத்தில் சீன ஜெட் விமானங்கள் தைவானின் வான்வெளியில் பல முறை எல்லை மீறி நுழைந்த நிலையில் தைவானின் அதிபரின் கருத்துக்கள் வந்துள்ளன.
  
“எங்கள் தேசிய பாதுகாப்பை தொடர்ந்து வலுப்படுத்தி, எங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான  வலிமை எங்களுக்கு உள்லது என்பதை நாங்கள் நிரூபிப்போம், தைவான் மக்கள் என்ன செய்ய வேண்டும் என யாரும் கட்டாயப்படுத்த முடியாது” என்று தைவான் அதிபர் Tsai Ing-wen கூறினார்.

சீனா கடைபிடிக்கும் கொள்கை ஜனநாயக கொள்கையோ, மக்களின் சுதந்திரத்திற்கான கொள்கையோ அல்ல.  ஆனால், தைவான் சுதந்திரமான மற்றும் ஜனநாயகமான வாழ்க்கை முறை  கடைபிடிக்கும் நாடு” என்று சாய் இங்-வென் (Tsai Ing-wen) கூறினார்.