20 ஆவது திருத்தச்சட்டம் இல்லாதொழிக்கப்பட்டு 19வது திருத்த சட்டம் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குருணாகல் பகுதியில் நேற்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘புதிய அரசொன்றை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுத்துவருகின்றோம்.

இராஜாங்க அமைச்சராக இருந்த சுசில் பிரேமஜயந்தவுக்கு 24 மணிநேரத்துக்குள் அதிஷ்டம் அடித்தது. நாளை எமக்கும் அது நடக்கலாம். எனவே, எதற்கும் தயாராகவே இருக்க வேண்டும்.

அரசை விமர்சிப்பதற்கு எனக்கு தகுதியில்லை எனவும், நீங்களும் ஜனாதிபதியாக இருந்தவர்தானே எனவும் சிலர் வலைத்தளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

எனது தலைமையில் அமைந்த ஆட்சியானது மாறுபட்டதொன்றாகும். இலங்கை அரசியல் வரலாற்றில் அவ்வாறானதொரு அரசு இன்னும் அமையவில்லை. ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது.

மனித உரிமைகள் மதிக்கப்பட்டன. தகவல் அறியும் உரிமை உறுதிப்படுத்தப்பட்டது. ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட்டனர். நீதித்துறையின் சுயாதீனம் பாதுகாக்கப்பட்டது.

அதேவேளை, 20 ஆவது திருத்தச்சட்டம் இல்லாதொழிக்கப்பட்டு 19 மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும். அப்போதுதான் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு கிட்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.