தமது கட்சியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவை, பிரதி சபாநாயகர் வேட்பாளராக களமிறக்குவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

அதேபோல பிரதி சபாநாயகர் பதவிக்கு தமது கட்சியின் சார்பில் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்சவின் பெயரை முன்மொழிவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உத்தேசித்துள்ளது.பிரதி சபாநாயகராக இரண்டாவது முறையாகவும் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, மறுநாளே அப்பதவியை இராஜினாமா செய்தார்.

இதனால் நாடாளுமன்றம் எதிர்வரும் 17 ஆம் திகதிகூடும்போது, முதலாவது பணியாக பிரதி சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும்.கடந்தமுறைபோல இம்முறையும் இருவரின் பெயர்கள் முன்மொழியப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் இரகசிய வாக்கெடுப்புமூலமே தேர்வு நடக்கும்.இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியைக்கூட பெண்ணொருவர் வகித்துள்ளார் (சந்திரிக்கா). அதேபோல உலகின் முதல் பெண் பிரதமரும் இலங்கை மண்ணில் இருந்துதான் தேர்வானார். (ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க) .

எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் பெண் எம்.பி. வகித்துள்ளார். அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவிகளையும் வகித்துள்ளனர்.ஆனால் முதலாவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற 1947 முதல் இற்றைவரை சபாநாயகராகவோ அல்லது பிரதி சபாநாயகராகவோ பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவாகவில்லை.2018 இல் பிரதி சபாநாயகர் பதவிக்கு வைத்தியர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே போட்டியிட்டிருந்தாலும் அவர் வெற்றிபெறவில்லை.

இதற்கு முன்னர் பிரதி சபாநாயகர் பதவிக்கு இம்தியாஸ் பாக்கீர் மாகாரை களமிறக்கிய ஐக்கிய மக்கள் சக்தி இம்முறை, அப்பதவிக்கு பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரை முன்மொழியவுள்ளது. இதனால் மொட்டு கட்சி பின்வாங்கக்கூடும்.

அவ்வாறு நடந்தால் ரோஹினி கவிரத்ன ஏகமனதாக தெரிவுசெய்யப்படுவார். சுதந்திர இலங்கையில் முதலாவது பெண் பிரதி சபாநாயகர் என்ற பதவிநிலை அந்தஸ்த்தையும் பெறுவார்.பெண் எம்.பியொருவர் பிரதி சபாநாயகர் பதவிக்கு வரவேண்டும் என்ற விடயத்தை பிரதமரும் அறிவித்துள்ளார்.