ராணுவ நிலைகள் மட்டுமே இலக்கு என கூறி உக்ரைன் மீது போரை தொடங்கிய ரஷியா, அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரிகள் என அனைத்து விதமான உள்கட்டமைப்புகளையும் நிர்மூலமாக்கி வருகிறது. 

இதில் அப்பாவி மக்கள் கொத்து, கொத்தாக கொன்று குவிக்கப்படுகின்றனர். 

இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள வின்னிட்சியா நகர் மீது ரஷிய படைகள் நேற்று உக்கிரமாக தாக்குதல் நடத்தின. 

அங்கு பல அடுக்குமாடிகளை கொண்ட வர்த்தக மையத்தின் மீது அடுத்தடுத்து 3 ஏவுகணைகள் வீசப்பட்டன. 

இதில் அந்த கட்டிடம் முற்றிலுமாக உருக்குலைந்து. அதன் அருகில் இருந்த பல குடியிருப்பு கட்டிடங்களும் சின்னாபின்னமாகின.

மேலும் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகின. 

இந்த தாக்குதலில் 21 பேர் பலியாகினர். 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். 46 பேரை காணவில்லை. 

இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இது வெளிப்படையான பயங்கரவாத செயல் என ரஷியாவை சாடினார்.