முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு சிங்கப்பூர் அரசாங்கம் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோட்டாபய ராஜபக்ச, அவரது மனைவி மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களை 15 நாட்களுக்கு மட்டுமே நாட்டில் தங்க சிங்கப்பூர் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

அந்த கால அவகாசம் முடிவடைந்த பின்னர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு கோட்டாபய ராஜபக்சவிற்கு அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், விசா காலம் நீடிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மாலைதீவு அரசாங்கத்திற்கு கடும் அழுத்தம்
இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து செயற்பாட்டாளர்களின் கடும் எதிர்ப்பினால் கோட்டாபய ராஜபக்ச விமானப்படை விமானத்தில் மாலைதீவுக்கு தப்பிச் சென்றார்.

எனினும், கோட்டாபய ராஜபக்சவை நாட்டைவிட்டு வெளியேற்றுமாறு மாலைதீவு அரசாங்கத்திற்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து சவூதி விமானத்தில் அவர் சிங்கப்பூர் சென்றார்.

இந்நிலையிலேயே, கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு சிங்கப்பூர் அரசாங்கம் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக அமெரிக்காவும் கோட்டாபய ராஜபக்சவிற்கு விசா வழங்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.