தேர்தலை கண்டு அஞ்ச வேண்டிய தேவை எமக்கு இல்லை. எந்தத் தேர்தலையும் எந்த நேரத்திலும் எதிர்கொள்வதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம் என்று முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மூன்றாவது கட்சி கூட்டம் சாம்பலில் இருந்து எழுவோம் என்ற தொனிப்பொருளின் கீழ், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று புத்தளம் ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் இனம், மதம் என வேறுபட்டு செயற்பட்டால் தற்போதைய பொருளாதார நெருக்கடி தீவிரமடையுமே தவிர குறைவடையாது. இதன் காரணமாகவே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ‘மீண்டும் ஒன்றிணைந்து எழுவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ், புத்தளம் மாவட்டத்தில் கட்சி மாநாட்டை நடத்துவதற்கு தீர்மானித்தது.

பொருளாதார பாதிப்பு சகல தரப்பினருக்கும் தாக்கம் செலுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்று தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட்டது. நாட்டு மக்களின் சுகாதாரத்துக்கு முன்னுரிமை வழங்கினோம் என்பதை உறுதியுடன் குறிப்பிட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.