தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பஜ்பேயில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் துபாய், சவுதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்கின்றன. இதனால் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் தங்கம், வெளிநாட்டு பணம், போதைப்பொருட்கள் உள்ளிட்டவை கடத்தி வருவதும், அதனை சுங்கவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டு பறிமுதல் செய்து வருவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று காலை துபாயில் இருந்து மங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு தனியார் விமானம் ஒன்று வந்திறங்கியது. இதைதொடர்ந்து அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் சுங்கவரி துறையினருக்கு சந்தேகம் உண்டானது. இதையடுத்து அந்த பயணியையும், அவரது உடைமைகளையும் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அவர் தன் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்கக்கட்டி கடத்தி வந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் அவர் கேரளா மாநிலம் காசர்கோடுவை சேர்ந்த இஸ்மாயில் அகமது கல்லார் என்பது தெரியவந்தது.இதையடுத்து அவரிடம் இருந்து 1¼ கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.57 லட்சத்து 14 ஆயிரத்து 940 ஆகும்.கைதுமேலும் இஸ்மாயிலை, பஜ்பே போலீசாரிடம் சுங்க வரித்துறையினர் ஒப்படைத்தனர். அதன்படி அவரை, போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.