“நாட்டில் மக்களின் அத்தியாவசியப் பொருட்களின் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. இப்போது தவறுகளைத் திருத்திக்கொள்ளாது போனால் அடுத்த மூன்று ஆண்டுகளில் மக்களால் இந்த அரசு விரட்டியடிக்கப்படும்.” என அமைச்சர் மகிந்த அமரவீர(Mahinda Amaraweera) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளமை உண்மையே. எந்தக் காரணம் கூறியும் இதனை அரசாக எம்மால் நிராகரிக்க முடியாது.

ஆனால், ஏற்கனவே பொருளாதார நெருக்கடி நிலைமையை நாடு எதிர்கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக கோவிட் வைரஸ் தாக்கம் காரணமாக மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளோம்.

இந்த இரண்டு ஆண்டுகளில் அரசாக நாம் விட்டுள்ள தவறுகள் என்ன என்பதை ஆராய்ந்து, சுய கணிப்பைச் செய்து கொண்டு உடனடியாகத் திருத்திக்கொள்ள வேண்டிய விடயங்களைக் கவனம் செலுத்தி மக்கள் மீதான சுமையைக் குறைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இல்லையேல் அடுத்த மூன்று ஆண்டுகளில் எமது அரசை மக்களே விரட்டியடித்து விடுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.