உக்ரைன் போருக்கு எதிரான எதிர்ப்பு கருத்துகள் அதிகளவில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதால், அதனை முடக்க ரஷியா நடவடிக்கை எடுத்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா 10-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

ரஷிய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வருகின்றன.

இதற்கிடையில், உக்ரைனில் நடத்தப்பட்டு வரும் சிறப்பு ராணுவ நடவடிக்கை (போர்) குறித்து பேஸ்புக்கில் பல்வேறு கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக, உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் கருத்துக்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.

அதேவேளை, உக்ரைன் மீதான தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் ரஷிய அரசு செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதனால், ரஷியா டுடே, ஸ்புட்னிக் போன்ற ரஷிய அரசு ஊடகங்கள் ஐரோப்பாவில் ஒளிபரப்பாவதை பேஸ்புக் நிறுவனம் தடுத்துள்ளது.

இந்நிலையில், ரஷியாவில் பேஸ்புக் செயலிக்கு தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ரஷிய அரசு செய்தி நிறுவனங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டியதால் ரஷியாவில் பேஸ்புக் செயலிக்கு தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.