அசிங்கமான அமெரிக்கரை வைத்துக்கொண்டு இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது. எனவே, அரசின் சாதாரணப் பெரும்பான்மை பலத்தையும் விரைவில் இல்லாமல் செய்வோம். – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

11 கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று கண்டிக்கு பயணம் மேற்கொண்டு வரலாற்று சிறப்புமிக்க தலதாமாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டனர். அதன்பின்னர் மகாநாயக்க தேரர்களை சந்தித்து, தமது வேலைத்திட்டத்தை கையளித்தனர்.

அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட விமல்,” நாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தை நாம் முன்வைத்தோம். அமைச்சரவையில் இருந்து எம்மை நீக்கினர்.

ஆனால் நாம் வேலைத்திட்டத்தை கைவிடமாட்டோம். அதனை தொடர்ந்து முன்னெடுப்போம்.நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச மிக மோசமானவர், அவருக்கு எப்படி கதைப்பதென்றுகூட தெரியாது.

அது நேற்றைய சர்வக்கட்சி மாநாட்டில் புலனானது. எனவே, இந்த அசிங்கமான அமெரிக்கரை வைத்துக்கொண்டு பயணிக்க முடியாது. எனவே, விரைவில் அரசின் சாதாரண பெரும்பான்மையையும் இல்லாமல் செய்வோம்.” – என்றார்.