மின்சாரம், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான விநியோகம் தொடர்பில் உருவாகியுள்ள நெருக்கடிகளுக்கு ஒரு மாத காலத்தில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படுமென நிதியமைச்சர் அலி சப்ரி நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று வலுசக்தி மற்றும் மின்சக்தி, வர்த்தக

மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சு உள்ளிட்ட அதிகாரிகள் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு முன்னிலையில் நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்டு பேசும்போதே அமைச்சர் அலி சப்ரி இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் தற்பொழுது நிலவிவரும் எரிசக்தி, மின்சக்தி மற்றும் சமையல் எரிவாயு தொடர்பான பிரச்சினைகளின் நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக எரிசக்தி, மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர, வர்த்தக மற்றும் சமுர்த்திஅபிவிருத்தி அமைச்சர் செஹான் சேமசிங்க, அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு முன்னிலையில் நேற்று (28) அழைக்கப்பட்டிருந்தனர்.

தற்போதைய நெருக்கடிக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது குறித்து கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.

இந்தியன் ஒயில் நிறுவனம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியன இணைந்து விலைச் சூத்திரமொன்றை அறிமுகப்படுத்தவிருப்பதாகவும், இது தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர இங்கு தெரிவித்தார்.

இந்த இரு அமைச்சுக்களுக்கும் புதிய செயலாளர்கள் இருவர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், தற்போதைய நிலைமையை முகாமைத்துவம் செய்து எதிர்வரும் சில நாட்களில் இப்பிரச்சினைகளை வெற்றிகொள்ள அதிகாரிகளுடன் இணைந்து முடிந்தளவு முயற்சித்து வருவதாகவும் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட குழுவின் உறுப்பினர்களுக்கு அமைச்சர் கூறினார். அத்துடன், இந்த நிலைமைக்கான காரணங்கள் மற்றும் நிர்வாகத்தில் காணப்பட்ட குறைபாடுகள் அடங்கிய விரிவான அறிக்கையொன்றை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எரிபொருள் விநியோகத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க முத்துராஜவல முனையம் 24 மணித்தியாலங்களும் இயங்குவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலைமையிலான பணியாளர் குழாம் முடிந்தளவு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரிக்கான கொடுப்பனவு நேற்று மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இதற்கமைய அடுத்த செப்டெம்பர் மாதம் வரை தேவையான நிலக்கரி காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், விமான சேவைகள் மற்றும் மின்சார சபைக்குத் தேவையான எரிபொருளை நேரடியாகக் கொள்வனவு செய்வதற்கு அவசியமான சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் இதற்கு கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட சகல தரப்பினரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை நாட்டின் மின்சாரக் கட்டமைப்புக்குள் இணைப்பதற்கு எதிராகக் காணப்படும் தடைகள் தொடர்பில் குழுவின் உறுப்பினர்கள் விசேட கவனம் செலுத்தியிருந்தனர். இதற்கமைய சர்வகட்சிக் குழுவொன்றை உருவாக்கி அதன் ஊடாக புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இது தொடர்பான சட்டத்திருத்தத்தை எதிர்காலத்தில் கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும், இதன் ஊடாக புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை மின்சாரக் கட்டமைப்பில் இணைக்க முடியும் என்றும் மின்சார சபையின் தலைவர் இங்கு தெரிவித்தார்.

வர்த்தகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் செஹான் சேமசிங்கவும் தற்போதைய எரிவாயுத் தட்டுப்பாடு குறித்து உரையாற்றினார். இந்திய கடன் வசதி மற்றும் உலக வங்கி கடனுதவியின் கீழ் எரிவாயு விநியோகம் சாதாரண நிலைக்கு கொண்டு வரப்படும் எனவும் எதிர்வரும் காலங்களில் எரிவாயு விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதே போன்று அரசியல் ஸ்திரத்தன்மையை விரைவில் உருவாக்க வேண்டியது தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

எவ்வாறாயினும் நேற்றைய இந்த கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை