எதிர்க்கட்சித்தலைவர், பிரதமர் என்ற பதவிகளை வகித்த ரணில் விக்ரமசிங்கவுக்கு சுமார் 17 வருடங்களின் பின்னர் தற்காலிக பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2005ஆம் ஆண்டு முதன்முறையாக ஜனாதிபதி தேர்தலில், மஹிந்த ராஜபக்சவை எதிர்த்து போட்டியிட்டபோதும், அதில் அவர் தோல்வியடைந்தார்.

இந்த நிலையில் அடுத்து வந்த ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் அவருக்கு கிடைக்கவில்லை.

எனினும் 2010 ஆம் ஆண்டு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவையும், 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவையும் முன்னிறுத்தி அவர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க ஆதரவை வழங்கினார்.

எனினும் 2010ஆம் ஆண்டில் சரத் பொன்சேகா, மஹிந்த ராஜபக்சவிடம் தோல்வியடைந்தார். 2015ஆம் ஆண்டில் ரணிலின் ஆதரவுடன் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார்.

இந்தநிலையில் இதுவரை காலம் கிடைக்காத ஜனாதிபதி பதவியின், பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் ஒன்றில் தோல்வியடைந்து, தேசிய பட்டியலில் நாடாளுமன்றம் வந்து, பிரதமராகி, தற்போது ஜனாதிபதியின் பதில் கடமைகளையும் பொறுப்பேற்றுள்ளமை ரணிலின் அரசியல் சகிப்புத்தன்மைக்கு கிடைத்த அங்கீகாரம் என்று கூறப்படுகின்றது.