” இலங்கையில் அமைதி நிலவுவதை சிலர் விரும்பவில்லை. இலங்கையர்கள் சுயமாக எழுவதையும் அவர்கள் சகித்துக்கொள்வதில்லை. கையேந்தும் நிலையையே விரும்புகின்றனர். இந்நிலைமை மாற வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து பொது வேலைத்திட்டத்தின் கீழ் பயணிக்க வேண்டும்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியும், முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாவலப்பிட்டிய தொகுதி கூட்டம் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் ஏற்பாட்டில் இன்று (16) நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமைதாங்கி உரையாற்றுகையிலேயே மஹிந்த ராஜபக்ச இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” எமது கட்சியை வெற்றிபெற வைப்பதற்கு மஹிந்தானந்த அளுத்கமகேயும், நாவலப்பிட்டிய தொகுதி மக்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். இன்றும் மஹிந்தானந்த தீவிரமாக உழைத்துக்கொண்டிருக்கின்றார். மக்களும் அவர் பின்னால் நிற்கின்றனர். அந்த சக்திதான் எமது கட்சியின் பலமாகும்.

நாம் ஒரு நாடாக பல சவால்களை சந்தித்துள்ளோம். கொவிட் பிரச்சினையை எதிர்கொண்டு, மீண்டெழ முயற்சிக்கும்போது பொருளாதார சவால் ஏற்பட்டது. அதனை எதிர்கொள்கையில் பிரச்சினைகளும் ஏற்பட்டன. மன்னர் காலத்தில் இருந்தே ஆக்கிரமிப்பு போன்ற சவால்களை, ஒன்றாக இருந்து – எழுந்து எதிர்கொண்ட வரலாறு எமக்கு உள்ளது. இது தெரிந்தும், தெரியாதவர்கள்போல் சிலர் செயற்படுகின்றனர்.

சவால்களை ஏற்பதற்கு தைரியமின்றி, விமர்சனங்களை மட்டும் முன்வைத்துக்கொண்டு, சுமைகளை எம்மீது திணிக்கின்றனர். தவறுக்கு நாம் மட்டுமே பொறுப்பு என பந்தாடியும் எம்மை பந்தாடியும் வருகின்றனர். மறுபுறத்தில் சேறுபூசும் நடவடிக்கையும் இடம்பெறுகின்றது. தாங்கள் நல்லவர்கள் என காட்டிக்கொள்ள முற்படுபவர்களும் தவறுகளை இழைத்துள்ளனர். தவறு இடம்பெறுவது இயல்பு. அதனை ஏற்க வெட்கப்பட வேண்டியதில்லை. தவறை திருத்திக்கொள்ள முற்படாமல் முடங்கி இருப்பதுதான் வெட்கம்.

பொதுவேலைத்திட்டத்துக்கு அழைப்பு விடுத்தாலும் வருவதில்லை. ஆட்சிகள் மாறும்போது அரசக் கொள்கைகளும் மாறுவது சிக்கலுக்குரிய விடயமாகும். எனவே, பொது வேலைத்திட்டத்தின்கீழ் ஒன்றாக இணைந்து பயணிக்க முன்வரவேண்டும். ” – என்றார் மஹிந்த.