தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான இரண்டாம் கட்ட சந்திப்பு கொழும்பில் இன்று(12) இடம்பெற்றது.

சம காலத்தில், சிறுபான்மைக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும், அதிகளவான கட்சிகள் பங்கேற்ற சந்திப்பாக இந்தக் கூட்டம் அமைந்திருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட மேலும் சில கட்சிகளின் தலைவர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

13ஆம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்தியாவிற்கு உறுதியளித்ததை போன்று 13ஆம் திருத்தத்தினை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஒன்றிணைந்து கோருவதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, நிரந்தர தீர்வுக்கான அலுத்தங்களை ஒருபோதும் கைவிட போவதில்லையென தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அது சமஷ்டி மற்றும் கூட்டு சமஷ்டியிலான தீர்வாகவே அமையும்.

இருப்பினும், தற்போது ஒற்றையாட்சியின் கீழ் உள்ள உரிமையைப் பெறுவதற்கான முனைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்வரும் 21ஆம் திகதி சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் மீண்டும் கூடி பொது ஆவணம் ஒன்றில் கைச்சாத்திடவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அதேநேரம், தேர்தல் முறைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் தேர்தலைப் பிற்போடுவதை மேலும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.