பகடைக்காயாகிய உக்ரைன்

“உக்ரைன் எல்லையில் ரசியா ஒரு இலட்சத்துக்கும் அதிகமான படைகளைக் குவித்துள்ளது. உக்ரைன் மீது எந்த நேரமும் தாக்குதல் தொடுக்க தயாராக உள்ளது. அந்தத் தாக்குதல் இன்றே நடந்து விடும், புதன்கிழமை அதிகாலை (பெப்ரவரி 16-ம் தேதி) 3.00 மணிக்கு நடந்து விடும், சில மணி நேரத்திற்குள் தாக்குதல் நடந்து விடும்”

“ரசியா உக்ரைன் மீது படையெடுத்தால், அதற்கான எதிர்வினை கடுமையாக இருக்கும். ரசியா மீது மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும். ரசியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு இயற்கை எரிவாயு வழங்குவதற்கான நார்ட் ஸ்ட்ரீம் 2 குழாய் திட்டத்தை ரத்து செய்து விடுவோம்”

அமெரிக்காவும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணி நாடுகளும் மேலே சொன்ன எச்சரிக்கைகளையும் மிரட்டல்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். மேற்கத்திய ஊடகங்களில் தினம் தினம் இந்த எச்சரிக்கைகளும் போர் பீதியும் ஆக்கிரமித்து வருகின்றன. மறுபக்கத்தில் ரசியா.

“உக்ரைன் மீது படையெடுக்கப் போகிறோம் என்பது முழுக்க முழுக்க அமெரிக்காவின் கற்பனை. நாங்கள் இராணுவப் பயிற்சிக்காக உக்ரைன் எல்லையில் படைகளை அனுப்பியுள்ளோம். பயிற்சிகள் முடிந்தவுடன் படைகள் முகாம்களுக்கு திரும்பி விடும்.”

“ஆனால், எங்களுக்கு பாதுகாப்பு கவலைகள் இருக்கின்றன. உக்ரைன் நேட்டோ கூட்டணியில் சேர்க்கப்படாது என்று அமெரிக்கா உத்தரவாதம் அளிக்க வேண்டும். உக்ரைன் அரசுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும். நேட்டோவை ரசியாவின் எல்லையில் உள்ள நாடுகள் வரை விரிவுபடுத்துவதை அனுமதிக்க முடியாது”

“உக்ரைனின் கிழக்குப் பகுதியான டான்பாஸ் பிராந்தியத்தில் உள்ள ரசிய மொழி பேசும் மக்கள் வாழும் சுதந்திர குடியரசுகளான டோனட்ஸ்க் மக்கள் குடியரசு, லுகான்ஸ்க் மக்கள் குடியரசு ஆகியவற்றை உக்ரைன் அரசு தாக்க முயற்சிக்கிறது. இவ்வாறாக, உக்ரைன் அரசுதான் மேற்கத்திய ஆயுதங்களை பயன்படுத்தி போருக்கு தயாரித்து வருகிறது”. இப்படி ரசியா தனது தரப்பை விளக்கி வருகிறது.

ரசியாவும் பெலாருசும் பிப்ரவரி 10-ம் தேதி கூட்டு இராணுவ பயிற்சிகளை தொடங்கின. உக்ரைனின் வடக்கு எல்லையில் உள்ள பெலாருசில் நடக்கும் இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள ரசியா 30,000 பேர் கொண்ட படைகளை அனுப்பியுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே, இத்தகைய செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. உலக நிகழ்வுகளை கவனித்து வருபவர்களை போர் மூண்டு விடும் என்ற பதற்றத்தில் வைத்திருக்கின்றன. போர் மூண்டால் கச்சா எண்ணெய் வழங்கல் பாதிக்கப்படும் என்ற பீதி ஏற்பட்டுள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $96 என்று உயர்ந்துள்ளது.

இந்தப் பதற்றம் நிதிச் சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. போர் மூண்டால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்ற பீதியில் நியூயார்க், லண்டன், மும்பை, சிட்னி என உலகெங்கிலும் உள்ள முக்கியமான பங்குச் சந்தைகளில் பங்கு விலைகள் வீழ்ச்சியடைகின்றன.

இதற்கிடையில், சீனத் தலைநகர் பெய்ஜிங்-ல் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. பிப்ரவரி 4-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டிகளின் தொடக்க விழாவிற்கு ரசிய அதிபர் விளாடிமிர் புடின் பெய்ஜிங் சென்றார். அங்கு அவர் சீன அதிபர் ஷி ஜின்பிங்-ஐ சந்தித்து பேசினார். சந்திப்பின் இறுதியில் ரசிய தரப்பும் சீனத் தரப்பும் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதில், ரசியாவின் பாதுகாப்புக் கவலைகளை அங்கீகரிப்பதாகவும், நேட்டோவின் விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ரசியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை சீனா எடுத்துள்ளது.

நேட்டோ என்பது 1949-ல் பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பர்க் அமெரிக்கா, கனடா, போர்ச்சுகல், இத்தாலி, நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் போட்டுக் கொண்ட “வடக்கு அட்லான்டிக் ஒப்பந்தக் கூட்டணி”. அதாவது அட்லான்டிக் பெருங்கடலின் மறுபக்கம் உள்ள அமெரிக்கா, ஐரோப்பாவில் உள்ள நாடுகளுடன் சேர்ந்து சோவியத் யூனியனுக்கு எதிராகவும் கம்யூனிசத்துக்கு எதிராகவும் ஏற்படுத்திக் கொண்ட ஏகாதிபத்திய இராணுவக் கூட்டணி நேட்டோ.

1991-ல் சோவியத் யூனியன் உடைந்து ரசியா, உக்ரைன், பெலோருஸ், மால்டாவியா (ஐரோப்பிய குடியரசுகள்), ஜார்ஜியா, உஸ்பெக், கசக், அஜர்பைஜான், கிர்கிஸ், தஜிக், ஆர்மீனியா, டர்க்மென், (மத்திய ஆசிய குடியரசுகள்) லித்துவேனியா, லத்வியா, எஸ்டோனியா (பால்டிக் குடியரசுகள்) ஆகிய 15 சோசலிச குடியரசுகளும் தனித்தனி நாடுகளாக பிரிந்தன.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் பால்டிக் பகுதியைச் சேர்ந்த முன்னாள் சோவியத் குடியரசுகளையும் படிப்படியாக நேட்டோ கூட்டணியில் இணைத்தது, அமெரிக்கா. இப்போது நேட்டோவில் 27 ஐரோப்பிய நாடுகள், துருக்கி, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் உள்ளன.

நேட்டோவை மேலும் விரிவுபடுத்தி, உக்ரைனையும் நேட்டோ கூட்டணியில் இணைப்பதை தனது பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாக பார்க்கிறது, ரசியா. “உக்ரைன் ஒரு இறையாண்மை கொண்ட சுதந்திரமான நாடு. அது நேட்டோ கூட்டணியில் சேர முன் வந்தால், அதற்கான நிபந்தனைகளை நிறைவு செய்தால் அதை சேர்த்துக் கொள்வோம். இருந்தாலும், இப்போதைக்கு உக்ரைனை நேட்டோவில் சேர்த்துக் கொள்ளும் திட்டம் இல்லை. ஆனால், ரசியா கேட்பது போல எதிர்காலத்தில் உக்ரைனை நேட்டோவிற்குள் உறுப்பு நாடாக அனுமதிக்கவே மாட்டோம் என்று உத்தரவாதம் தர முடியாது” என்று அமெரிக்கா கூறுகிறது.

இதை ரசியா ஏற்றுக் கொள்ளவில்லை. “நிலைமை எந்த நேரத்திலும் படு மோசமாக ஆகி விடலாம். எனவே, அமெரிக்கக் குடிமக்கள் எல்லோரும் உக்ரைனை விட்டு வெளியேறி விடுங்கள்” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிப்ரவரி 11-ம் தேதி எச்சரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து, அமெரிக்க தூதரக அதிகாரிகளை உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ விட்டு வெளியேறி விடும்படி அமெரிக்க வெளியுறவுத்துறை உத்தரவிட்டது. உக்ரைன் இராணுவத்துக்கு பயிற்சி அளித்து வந்த அமெரிக்கப் படைகளும் உக்ரைனிலிருந்து திரும்பப் பெறப்பட்டிருக்கின்றனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 1,000 பேர் கொண்ட அமெரிக்கப் படையினரை ஜெர்மனியில் இருந்து ருமேனியாவுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார். கூடுதலாக 2,000 பேர் கொண்ட அமெரிக்கப் படைகளை போலந்துக்கும் ஜெர்மனிக்கும் அனுப்பியுள்ளார்.

பெப்ரவரி 16-ம் தேதி அதிகாலை 3.00 மணிக்கு ரசியா உக்ரைன் மீது ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்கும் என்று மேற்கத்திய ஊடகங்கள் அறிவித்தன. உக்ரைனின் சுதந்திர சதுக்கத்தில், நேரலை காமரக்களை அமைத்து, போரை நேரடி ஒளிபரப்பு செய்யத் தயாராக இருந்தது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம். தம் நாட்டு பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில், “பீதி”யை கிளப்ப வேண்டாம் என்று உக்ரைன் அதிபர் விளாடிமைர் செலன்ஸ்கி அமெரிக்காவை கேட்டுக் கொண்டுள்ளார்.

ரசியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளும் அவற்றின் ஆட்சியாளர்களான ரசிய அதிபர் விளாடிமீர் புடின், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஷி ஜின் பிங் – இவர்கள்தான் இப்போது நடந்து கொண்டிருக்கும் உலக அளவிலான போர்க் காட்சியின் முக்கிய நாயகர்கள். உலக கச்சா எண்ணெய் வளங்கள் மீதான ஏகாதிபத்திய மேலாதிக்கம், உலகளாவிய நிதிச் சந்தைகளில் எல்லை தாண்டி பாயும் சர்வதேச நிதி மூலதனம், உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள், சீனாவின் பொருளாதார எழுச்சி ஆகியவை இந்தப் போரின் பின்னணிகள்.

உக்ரைனை மையமாகக் கொண்டு நடந்து கொண்டிருக்கும் இந்த போர் நாடகத்தின் வசனங்களை மேலே பார்த்தோம். அதன் கதை, திரைக்கதை என்ன? இந்த நாடகம் யாரால் எழுதப்பட்டு, இயக்கப்பட்டு வருகிறது? இதில் வேறு யார் முக்கியமான பாத்திரங்கள்?

கடந்த 100 ஆண்டுகளில் இருப்பதைப் போலவே மிகச் சமீபத்திய இந்தப் போர்க் களத்தின் பின்னணியிலும் அமெரிக்காவின் அரசியல் பொருளாதாரம் உள்ளது; அமெரிக்காவின் உலகளாவிய அரசியல், இராணுவ, பொருளாதார ஆதிக்கத்தின் உள்ளார்ந்த முரண்பாடு இதில் வெளிப்படுகிறது. அந்த முரண்பாடு அமெரிக்க உள்நாட்டு அரசியலிலும் வெளிநாட்டு கொள்கைகளிலும் பிரதிபலிக்கிறது; இந்த முரண்பாடு வெளிப்படும் பதற்றமான உலக நாடுகளில் ஒன்றாக உக்ரைன் உள்ளது. உக்ரைனை மையமாகக் கொண்ட போர்க்களம் தற்போது சூடு பிடித்துள்ளதற்கான காரணத்தை உக்ரைனின் அரசியல் பொருளாதாரத்திலும், ரசியாவுடனான அதன் உறவிலும் தேட வேண்டும். ரசியாவும், உக்ரைனும் 1991-ல் சோவியத் யூனியன் உடைந்த பிறகு முதலாளித்துவ ஜனநாயகக் குடியரசுகளாக ஆன பிறகு கடந்து வந்த பாதையின் கொந்தளிப்பான வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலில், உக்ரைனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான சமீபத்திய அரசியல் தொடர்புகளை பார்க்கலாம். அமெரிக்காவின் இப்போதைய அதிபர் ஜோ பைடன் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர். 2020-ல் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப்-ஐ தோற்கடித்து அதிபராக பதவியேற்றார். ஜோ பைடன் இதற்கு முன்னதாக, 2009-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்த போது துணை அதிபராக பணிபுரிந்தார்.

அதற்கு முன்னதாக, 1973 முதல் 2009 வரை அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் டெலாவேர் மாநிலத்தின் பிரதிநிதியாக ஜோ பைடன் பணி புரிந்தார். அதாவது, ஜோ பைடனின் அரசியல் வாழ்வும், கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தின் பரிணாம வளர்ச்சிக் காலமும் பொருந்திப் போகின்றன.

2014-ம் ஆண்டில் உக்ரைனில் ரசிய ஆதரவு அதிபர் விக்டர் யானுகோவிச் அரசு கவிழ்க்கப்பட்டது; அமெரிக்க ஆதரவு இடைக்கால அரசு பதவியேற்றது. அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ம் தேதி, அமெரிக்க துணை அதிபர் என்ற வகையில் அதிகாரபூர்வ பயணமாக ஜோ பைடன் உக்ரைனுக்குச் சென்றார். “இயற்கை எரிவாயுக்கு ரசியாவை சார்ந்து உக்ரைன் இருக்க வேண்டாம். உள்நாட்டிலேயே இயற்கை எரிவாயு வளங்களை பயன்படுத்துவதற்கு அமெரிக்கா தொழில்நுட்ப உதவிகளை வழங்கும்” என்று அறிவித்தார்.

ஜோ பைடன் உக்ரைனுக்கு போவதற்கு 3 நாட்களுக்கு முன்னர்தான், அவரது மகன் ஹன்டர் பைடன், உக்ரைனில் செயல்படும் புரிஸ்மா ஹோல்டிங்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இணைந்தார். புரிஸ்மா ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனம் சைப்ரஸ் நாட்டில் பதிவு செய்யப்பட்டு உக்ரைனில் செயல்படும் நிறுவனம். 2016-ம் ஆண்டில் புரிஸ்மா உக்ரைனில் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களில் இரண்டாவது பெரிய நிறுவனமாக இருந்தது.

புரிஸ்மா ஹோல்டிங்ஸ் உக்ரைனின் முதலாளித்துவ சிறு கும்பலைச் (Oligarch) சேர்ந்த மிகோலா ஜ்லோசெவ்ஸ்கி என்பவருக்கு சொந்தமானது. (சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, ரசியா, உக்ரைன் முதலான முதலாளித்துவ குடியரசுகளில் முதலாளிகளின் சிறு கும்பல்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றின. அவை நாட்டின் பொதுச்சொத்துக்களை தனியார்மயப்படுத்தி பெரும் செல்வத்தைக் குவித்தன. தொடர்ந்து அரசியலிலும் பொருளாதாரத்தில் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன.) தனது மகனின் வணிக நடவடிக்கைகளுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று ஜோ பைடன் விளக்கம் அளித்திருந்தார்.

2014-ம் ஆண்டில் உக்ரைனிய முதலாளித்துவ சிறுகும்பலைச் சேர்ந்த பெட்ரோ போரொஷெங்கோ அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் உக்ரைனின் கிழக்கு எல்லையில் ரசியாவுடனான மோதலை தீவிரப்படுத்தினார். உள்நாட்டில் உக்ரைனிய இனவாதத்தை முன்னெடுத்தார். 2018-ம் ஆண்டில் உக்ரைன் பழமைவாத திருச்சபையை ரசிய பழமைவாத திருச்சபையில் இருந்து பிரிப்பதாக அறிவித்தார். அவரது ஆட்சிக் காலத்தில் இராணுவம், மொழி, மதநம்பிக்கை என்ற முழக்கங்கள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன.

ஜூலை 2017-ல் பெட்ரோ பொரொஷெங்கோ அரசு ஐரோப்பிய ஒன்றியத்துடன் கூட்டிணைவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால், உக்ரைனில் பொருளாதார நெருக்கடி தீவிரமானது.

ஏப்ரல் 2019-ல் நடந்த உக்ரைன் அதிபர் தேர்தலில் மேற்பத்திய ஆதரவு பெட்ரோ பொரோஷெங்கோ தோற்கடிக்கப்பட்டார். நகைச்சுவை நடிகரான விளாடிமைர் செலன்ஸ்கி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ரசியாவுடன் மோதலை முடித்து அமைதி ஏற்படுத்தப் போவதாகவும், உக்ரைனின் கிழக்கில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதாகவும் வாக்களித்திருந்தார்.

இதற்கிடையில், அமெரிக்காவில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் அதிபராக ஆகியிருந்தார். அவரது ஆட்சியில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றங்களைச் செய்தார். அமெரிக்கா வெளிநாடுகளில் தலையிடுவதை குறைக்க வேண்டும், அமெரிக்காவின் உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும், சீனாவின் பொருளாதார எழுச்சியை முறியடிக்க வேண்டும் என்று செயல்பட ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக அமெரிக்கா கடைப்பிடித்து வந்த சர்வதேச அரசியல் கொள்கைகளை டொனால்ட் டிரம்ப் கைவிட ஆரம்பித்தார்.

ரசியாவின் விளாடிமீர் புடினுடன் பேச்சு வார்த்தை நடத்தி நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருமாறு உக்ரைன் பிரதமர் விளாடிமைர் செலன்ஸ்கியிடம் கூறினார். உக்ரைனுக்கு வழங்குவதாக அறிவித்திருந்த அமெரிக்க இராணுவ உதவியை நிறுத்தி வைத்தார்.

2019 செப்டம்பரில், புரிஸ்மா ஹோல்டிங் மீதும் ஹன்டர் பைடன் மீதும் ஊழல் விசாரணை நடத்தும்படி விளாடிமைர் செலன்ஸ்கிக்கு டொனால்ட் டிரம்ப் அழுத்தம் கொடுத்தார். புரிஸ்மா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முறைகேடுகளை விசாரித்து வந்த உக்ரைனிய அரசின் தலைமை வழக்கறிஞர் விக்டர் ஷோகினை ஜோ பைடன் பதவி விலக வைத்தார் என்று டொனால்ட் டிரம்பும் அவரது குடியரசுக் கட்சியும் குற்றம் சாட்டின.

அமெரிக்க வெளிநாட்டு கொள்கையை தனது சொந்த அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தினார் என்று டொனால்ட் டிரம்ப் மீது குற்றம் சாட்டியது, ஜனநாயகக் கட்சி. அமெரிக்க நாடாளுமன்றத்தில், டொனால்ட் டிரம்ப் மீது பதவிநீக்க தீர்மானத்தைக் கொண்டு வந்தது. பதவி நீக்க தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையில் நிறைவேற்றப்பட்டது, ஆனால் மேலவையில் தோற்கடிக்கப்பட்டது.

அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்-ஐ தோற்கடித்து 2021-ம் ஆண்டில் அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன். அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் (அதாவது 6 மாதங்களுக்கு முன்னர்), உக்ரைன் அதிபர் விளாடிமைர் செலன்ஸ்கி ஜோ பைடனை அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் சந்தித்தார். “ரசிய ஆதிக்கத்துக்கு எதிராக உக்ரைனின் இறையாண்மையையும், எல்லைகளையும் பாதுகாப்பதற்கு அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது” என்று ஜோ பைடன் அறிவித்தார்.

ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஒரு ஆண்டுக்குள் ஐரோப்பாவில் போர் நெருக்கடி தோன்றியுள்ளது. ஜோ பைடன் அமெரிக்க அதிபர் மாளிகையில், உக்ரைன் அதிபரை சந்தித்து பேசிய 6 மாதங்களுக்குள் உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் உருவாகியுள்ளது.

எனவே, உக்ரைன் பிரச்சினை என்பது ரசியாவுடனான அதன் எல்லைப் பிரச்சினை என்பதைத் தாண்டியது. அமெரிக்காவின் உலகளாவிய அரசியல் பொருளாதார முரண்பாடுடன் தொடர்புடையது.

தொடரும்…

உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 2

உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 2

அப்துல்

அமெரிக்காவின் உலக மேலாதிக்க வளர்ச்சியும் அது எதிர்கொள்ளும் சவால்களும்

1. கச்சா எண்ணெய்

1970-கள் முதல் உலக கச்சா எண்ணெய் வளங்கள் மீதான ஆதிக்கமும், டொலரை அச்சாகக் கொண்ட உலகளாவிய நிதித்துறை கட்டமைப்பும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்துக்கான அச்சாணிகளாக உள்ளன. நேரடி அரசியல், இராணுவ ஆதிக்கத்தின் மூலமான காலனிகள் இல்லாமலேயே உலகெங்கும் உள்ள நாடுகளில் உழைப்பாளர்களின் உழைப்பைச் சுரண்டி உபரி-மதிப்பைக் கைப்பற்றுவதற்கான அடிப்படையாக இவை உள்ளன.

கச்சா எண்ணெய் நவீன முதலாளித்துவப் பொருளாதாரத்தின் ஒரு இன்றியமையாத அடிப்படை வளமாக உள்ளது. வாகனங்களில் எரிசக்தியாக பயன்படும் பெட்ரோல், டீசல், விமானங்களுக்கான எரிபொருள், பிளாஸ்டிக் பொருட்கள், செயற்கை உரங்கள், இன்னும் பிற செயற்கை வேதிப் பொருட்கள் என நவீன வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் கச்சா எண்ணெய் ஆதிக்கம் செலுத்துகிறது.

கச்சா எண்ணெய் வழங்கலையும் அதன் மூலம் உலகச் சந்தையில் அதன் விலையையும் கட்டுப்படுத்துவதன் மூலம், உலகநாடுகள் மீதான தனது சுரண்டல் உறவை அமெரிக்கா தொடர்ந்து உறுதிப்படுத்தி வந்தது.

சவுதி அரேபியா, குவைத், கத்தார் போன்ற கச்சா எண்ணெய் வளம் கொண்ட வளைகுடா நாடுகளை ஆதரித்து நெருக்கமான உறவை பராமரித்தது, அமெரிக்கா. வளைகுடா பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள அடுத்தடுத்த போர்களை நடத்தி வந்தது.

  • 1980-களில், ஈரானுக்கு எதிராக போர் நடத்த ஈராக்குக்கு உதவியது.
  • 1990-களில் ஈராக்குக்கு எதிராக முதல் ஈராக் போரை நடத்தியது.
  • 2000-களில் இரண்டாம் ஈராக் போரை நடத்தி ஈராக் அதிபர் சதாம் உசைனை வீழ்த்தியது.
  • 2011-ம் ஆண்டில் லிபியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தி லிபிய அதிபர் முகமது கடாஃபியை படுகொலை செய்தது.
  • 2011-க்குப் பிறகு சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் அரசுக்கு எதிராக போர் தொடுத்தது.
சர்வதேச கச்சா எண்ணெய் அரசியல்

இவ்வாறு, உலக கச்சா எண்ணெய் வளங்கள் மீதான தனது பிடியை உறுதிப்படுத்திக் கொண்டு வந்தது, அமெரிக்கா. அதன் மூலம் தனது உலக மேலாதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டிக் கொண்டது.

அதே நேரம், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை பெருமளவு கொண்டுள்ள நாடுகளான ஈரான், வெனிசுலா, ரசியா போன்றவற்றில் அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்க்கும் அரசுகளைக் கவிழ்த்து அமெரிக்க ஆதரவு அரசுகளை உருவாக்க முயற்சிக்கிறது, அமெரிக்கா. உக்ரைனில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வரும் அரசியல் குழப்பங்களை இதனோடு பொருத்திப் புரிந்து கொள்ளலாம்.

ஆட்சி மாற்றம் சாத்தியமில்லாமல் போகும் போது அந்த நாடுகளுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்கிறது, அமெரிக்கா. அந்தப் பொருளாதாரத் தடையை அமல்படுத்துவதற்கு ஒரு வலுவான ஆதாரமாக சர்வதேச பணவியல் கட்டமைப்பில் அமெரிக்கா கொண்டுள்ள ஆதிக்கம் உள்ளது.

2. டொலரை அச்சாகக் கொண்ட சர்வதேச பணவியல் கட்டமைப்பு

அமெரிக்க உலக மேலாதிக்கத்தின் அடிப்படையாக, கச்சா எண்ணெய் வளத்தை கட்டுப்படுத்துவதற்கு இணையாக அமெரிக்க டொலரை அச்சாகக் கொண்ட சர்வதேச பணவியல் கட்டமைப்பு உள்ளது. அமெரிக்கா கச்சா எண்ணெய் வளங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை உறுதி செய்வதாகவும் டொலரை மையமாகக் கொண்ட சர்வதேச பணவியல் கட்டமைப்பு உள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கச்சா எண்ணெயை விற்பதையும் வாங்குவதையும் டொலர் மூலமாக செய்வதன் மூலம் இந்த டொலரை அச்சாகக் கொண்ட சர்வதேச பணவியல் கட்டமைப்பு மேலும் வலுப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள நாடுகள், கச்சா எண்ணெய் வர்த்தகத்தை மட்டுமின்றி, தமது பெரும்பாலான சர்வதேச வர்த்தகத்தையும், கொடுக்கல் வாங்கல்களையும் அமெரிக்க நாணயமான டொலரில் நடத்துகின்றன. தமது சர்வதேச சேமிப்புகளை அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன. அதாவது, அமெரிக்க டொலரில் சேமித்து வைக்கின்றன.

டொலர் என்ற சர்வதேச நாணயத்தை ஒழுங்குபடுத்தி வெளியிடும் நாடு என்ற வகையில் அமெரிக்கா, நாணயமடிக்கும் அரசுக்கான ஆதாயத்தைப் பெற்றுள்ளது. அதாவது, உற்பத்தி எதையும் செய்யாமலேயே டொலர்களை உருவாக்கி பிற நாடுகளின் சரக்குகளை அமெரிக்கா வாங்கிக் கொள்ள முடியும், பிற நாடுகளில் முதலீடு செய்வதற்கான நிதியை உருவாக்கிக் கொள்ள முடியும்.

டொலர் மேலாதிக்கம்

ஆனால், இந்த நாணயமடிக்கும் வலிமை வரம்புக்குட்பட்டது, அதை வரம்பு மீறி பயன்படுத்தினால் டொலர் மீதான நம்பகத்தன்மை குறைந்து விடும். நீண்ட கால நோக்கில் அதன் சர்வதேச நாணயம் என்ற தகுதி பாதிக்கப்படும். ஆனால், குறுகிய கால நோக்கில் இந்த நாணயமடிக்கும் வலிமையை அமெரிக்க தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும், அவ்வாறு பயன்படுத்தவும் செய்கிறது.

அது மட்டுமில்லை. சர்வதேச பணப் பரிவர்த்தனைகளை நடத்தும் உலகளாவிய நிதித்துறைக் கட்டமைப்பு அமெரிக்காவின் நியூயார்க்கையும், பிரிட்டனின் லண்டனையும் மையமாகக் கொண்டுள்ளது. இந்தக் கட்டமைப்பில் இணைவதன் மூலம்தான் பிற நாடுகளின் வங்கிகளும் சர்வதேச நிதி பரிவர்த்தனைகளை நிகழ்த்த முடியும். உதாரணமாக, சர்வதேச அளவில் வங்கிகளுக்கு இடையே பரிவர்த்தனைகளை நடத்துவதற்கான “ஸ்விஃப்ட்” (SWIFT)என்ற வசதி இந்தக் கட்டமைப்புக்கு உள்ளே மட்டுமே செயல்படுகிறது.

எல்லா நாடுகளும் இந்தக் கட்டமைப்புக்குள் இருப்பதால், ஒவ்வொரு நாடும் இதற்குள் இணைய வேண்டியுள்ளது. சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் (Facebook) எல்லோரும் இணைந்திருப்பதால், ஒவ்வொருவரும் அதில் இணைந்துதான் தமது நண்பர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதற்கு நிகரானது இது.

எனவே, அமெரிக்காவின் கொள்கைகளை எதிர்க்கும் நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம். உதாரணமாக, ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இப்போது ஈரான் நிதித்துறை வங்கிக் கட்டமைப்பில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அமெரிக்காவுடன் மட்டுமின்றி உலகின் வேறு எந்த நாட்டுடனும் வர்த்தகம் செய்வது ஈரானுக்கு சாத்தியமின்றி போகிறது. ஏனென்றால், அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் உள்ள வங்கிகள் ஈரானுடனான பரிவர்த்தனைகளை கையாளுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.

வேறு எந்த நாடாவது, உதாரணமாக இந்தியா, அமெரிக்கத் தடையை மீறி ஈரானுடன் வர்த்தகம் செய்தால் இந்தியாவும் அமெரிக்கத் தடையை எதிர்கொள்ளும். எனவே, எல்லா நாடுகளும் அமெரிக்காவின் கட்டளைகளை ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. அதாவது, நாட்டாமையின் தீர்ப்பினால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படும் நிலைமைக்கு அமெரிக்காவிற்கு அடிபணியாத நாடுகள் தள்ளப்படுகின்றன. அல்லது, ஃபேஸ்புக் நிர்வாகத்தால் ஃபேஸ்புக் (Facebook) கணக்கு முடக்கப்பட்ட ஒருவரின் நிலைமைதான் அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ஒரு நாட்டின் நிலை.

உற்பத்தி உலகமயமாதல்

3. அமெரிக்க மேலாதிக்கமும் சர்வதேச உழைப்புச் சுரண்டலும்

உலக மேலாதிக்கத்துக்கான இத்தகைய கட்டமைப்பின் மூலம், உலகெங்கிலும் உள்ள இயற்கை வளங்களை அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகளின் ஏகபோக நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன. நுகர்வுச் சந்தைகளிலும் மூலப்பொருள் சந்தைகளிலும் ஏகபோகத்தை நிலைநாட்டியுள்ளன.

இந்த ஏகபோக நிறுவனங்கள் உலக அளவில் தமது ஏகபோக ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கு அமெரிக்காவின் இராணுவ, நிதித்துறை ஆதிக்கம் அடித்தளமாக உள்ளது. ஏகபோக நிறுவனங்கள் சர்வதேச ரீதியில் தடையின்றி வர்த்தகம் செய்வதையும், நாடுகளின் சந்தைகளில் தடையின்றி செயல்படுவதையும் உலக வர்த்தகக் கழகம் (WTO) மூலம் போடப்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் உறுதி செய்கின்றன. ஐ.எம்.எஃப் (IMF), உலக வங்கி மூலம் ஏகாதிபத்திய மூலதனம் நாடுகளின் எல்லை தாண்டி பாய்வதற்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு, அமெரிக்காவையும் பிற ஏகாதிபத்திய நாடுகளையும் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் மூலப் பொருட்கள் மீதான கட்டுப்பாடு, சந்தைகளில் ஏகபோகம், தொழில்நுட்பங்கள் மீது அறிவுசார் சொத்துரிமை போன்ற நடவடிக்கைகள் மூலம் உலகப் பொருளாதாரத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான ஏகாதிபத்தியக் கட்டமைப்பு உருவாக்கி பராமரிக்கப்படுகிறது.

எனவே, ஒரு நாட்டில் உழைப்பையும் இயற்கை வளங்களையும் சுரண்டுவதற்கு அந்த நாட்டை இராணுவ ரீதியாக கைப்பற்ற வேண்டும். அரசியல் ரீதியாக காலனியாக்க வேண்டும் என்ற தேவை இல்லாமல் போகிறது. மேலே சொன்ன சர்வதேச வர்த்தகக் கட்டமைப்பு, நிதித்துறை கட்டமைப்பு, அமெரிக்காவின் உலகளாவிய இராணுவ ஆதிக்கம் இவற்றின் பின்னணியில் ஏகாதிபத்திய நாடுகளின் ஏகபோக நிறுவனங்கள் உலகின் எந்தப் பகுதியிலும் உழைப்பைச் சுரண்டவும், அவ்வாறு சுரண்டிய உபரி-மதிப்பைக் கைப்பற்றி இலாபம் ஈட்டவும் முடிகிறது. அவ்வாறு குவிக்கும் இலாபத்தை மூலதனமாகத் திரட்டவும் முடிகிறது.

இந்நிலையில், அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களும், ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களும் பொருள் உற்பத்தித் துறையிலிருந்து வெளியேற ஆரம்பித்தன. தாம் விற்கும் பொருட்களை சீனா போன்ற பிற நாடுகளின் நிறுவனங்களில் செய்து வாங்கும் முறையை பின்பற்றின. இந்த நாடுகளின் குறை-கூலி தொழிலாளர்களை கொடூரமாக சுரண்டி இந்தப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டன. அவ்வாறு செய்து வாங்கிய பொருட்களை அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் ஏகபோக விலைகளில் விற்று ஏகபோக நிறுவனங்கள் கொள்ளை இலாபம் ஈட்டின.

இவ்வாறு, 1970-களிலும் 1980-களிலும் அமெரிக்காவிலிருந்து உற்பத்தித் துறை ஆலைகள் பெருமளவில் வெளியேறின.

முதலில் மெக்சிகோ, தென் அமெரிக்க நாடுகள், ஜப்பான், தென் கொரியா, தாய்வான் போன்ற நாடுகளுக்கு ஆலை உற்பத்தி இடம் மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து 1980-களிலும் 1990-களிலும் இன்னும் பெரிய அளவில் சீனா, வியட்நாம், வங்கதேசம் போன்ற நாடுகளுக்கும் அமெரிக்காவின் ஆலை உற்பத்தி மாற்றப்பட்டது. இந்த நாடுகளில், கோடிக்கணக்கான தொழிலாளர்கள் குறைந்த கூலி கொடுத்து கொடூரமாக சுரண்டப்படுகின்றனர்.

இந்தத் தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் ஆயத்த ஆடைகள், மின்னணு பொருட்கள், முதலான சரக்குகள் ஏகாதிபத்திய நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்களால் விற்கப்படுகின்றன. அதன் மூலம், மூன்றாம் உலக நாடுகளின் உழைப்பைச் சுரண்டி அவை கொள்ளை இலாபம் ஈட்டுகின்றன. தமது மூலதனத்தை மேலும் மேலும் பெருக்கிக் கொள்கின்றன.

சர்வதேச வர்த்தகமும் சேவைத்துறையின் வளர்ச்சியும்

4. அமெரிக்காவின் நிதித்துறை சூதாட்டமும் சீனாவின் பொருளாதார எழுச்சியும்

இந்த சர்வதேச உழைப்புச் சுரண்டலுக்கும் மூலதனத் திரட்டலுக்கும் அமெரிக்காவின் சர்வதேச நிதித்துறை மேலாதிக்கமும், இராணுவ மேலாதிக்கமும் அடிப்படையாக உள்ளது. ஆனால், அமெரிக்காவில் இருந்து உற்பத்தித் ஆலைகளை பன்னாட்டு நிறுவனங்கள் வெளியே கொண்டு சென்றதன் விளைவாக, அமெரிக்க பொருளாதாரத்தின் உற்பத்தி அடித்தளம் பலவீனமானது. அமெரிக்கத் தொழிலாளர்களின் உண்மைக் கூலி தேக்கம் அடைந்தது. அதே நேரம் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யும் பொருட்களின் மலிவான விலை உண்மைக் கூலியின் வீழ்ச்சியின் விளைவுகளை பகுதியளவு ஈடுகட்டியது.

உண்மைக் கூலி தேங்கிய நிலையில் கடன் மூலம் பொருட்களை வாங்கும் கடன் பொருளாதாரம் அமெரிக்க வங்கிகளால் ஊக்குவிக்கப்பட்டது. இந்தக் கடன் பொருளாதாரத்துக்கு அடித்தளமாக வெளிநாடுகளில் இருந்து வந்து அமெரிக்க வங்கிகளில் குவியும் டொலர் சேமிப்புகள் இருந்தன. வீட்டுக் கடன், வாகனக் கடன், கல்விக் கடன், கடன் அட்டைக் கடன் என அமெரிக்கக் குடும்பங்கள் மீது பெரும் கடன் சுமை ஏற்றப்பட்டது. அந்தக் கடன் சுமை மூலம் அமெரிக்காவின் நுகர்வுச் சந்தை ஊதிப் பெருக்கப்பட்டது.

இவ்வாறு, அமெரிக்க பொருளாதாரம் வெளிநாடுகளில் இருந்து வரும் இலாபத்தை மறுசுழற்சி செய்யும் மையமாக மாறியது. இந்த இலாப மறுசுழற்சியை அடிப்படையாகக் கொண்ட நிதித்துறையும், நிதித்துறை நிறுவனங்களுக்கு சேவை வழங்கும் துறைகளும், ரியல் எஸ்டேட் ஊக வணிகமும், பிற சேவைத் துறைகளும் வளர்ச்சியடைந்தன. அமெரிக்க வேலை வாய்ப்புகளில் பெருமளவு நிதித்துறை, ரியல் எஸ்டேட் போன்ற சேவைத் துறைகளுக்கு மாறின. தொழில்துறை வேலை வாய்ப்புகள் குறைந்தன.

இந்த சேவைத்துறை வேலைகளிலும், தகவல் தொழில்நுட்ப சேவைகளில் கணிசமான பகுதி வெளிநிறுவனப் பணி முறையில் இந்தியா போன்ற நாடுகளில் செய்து வாங்கப்படுகிறது. இதுவும் அமெரிக்க தொழிலாளர்களின் உண்மைக் கூலிகள் குறைந்து செல்வதை துரிதப்படுத்தியது.

அமெரிக்கா உலகெங்கிலும் மேலாதிக்க போர்களிலும், நிதித்துறை ஊக வணிக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்த அதே நேரத்தில், சீனா ஆலை உற்பத்தித் துறையில் பெரும் வளர்ச்சி பெற்று அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் பெருமளவு பொருள் ஏற்றுமதி செய்தது. பொருளாதார ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் தன்னை வலுப்படுத்திக் கொண்டது.

சீனாவின் உற்பத்தி அடித்தளமும் பொருளாதார பலமும் வளர்ச்சியடைந்தன. சீனாவின் டொலர் கையிருப்புகளும் அமெரிக்கக் அரசுக் கடன் பத்திர கையிருப்புகளும் அதிகரித்தன. இவை அனைத்தும் இரண்டு தலைமுறை சீனத் தொழிலாளர்களின் கடும் உழைப்பின் மூலமும், அவர்கள் மீதான கடும் சுரண்டல் மூலமும் சாத்தியமாயின.

உலகளாவிய உற்பத்தி மூலம் மூலதனத் திரட்டல், உலகளாவிய நிதித் துறையில் ஊக வணிகம், உலகளாவிய இராணுவ ஆதிக்கம் என்ற அமெரிக்க மேலாதிக்கக் கட்டுமானத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகள் மேலும் மேலும் தீவிரமடைந்தன.

அமெரிக்க நிதித்துறை சூதாட்டம் 2007-08 ஆண்டுகளில் சரிவடைந்தது. அமெரிக்க வங்கிகளின் கடன் பொருளாதார அடிப்படை தகர்ந்தது. கோடிக்கணக்கான அமெரிக்கக் குடும்பங்கள் தமது சேமிப்புகளை இழந்தன. அமெரிக்க அரசும் அமெரிக்க ஒன்றிய ரிசர்வ் வங்கியும், உலக அளவிலான தமது நிதித்துறை ஆதிக்கத்தைப் பயன்படுத்தி அமெரிக்க வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் மீட்டன.

அமெரிக்க பொருளாதார நெருக்கடி

ஆனால், அமெரிக்காவில் உள்நாட்டு பொருளாதார நெருக்கடி தீரவில்லை. அமெரிக்க தொழிலாளர்கள் மீது பொருளாதார அழுத்தம் அதிகரித்தது. வேலை வாய்ப்புகள் குறைந்தன. கடன் பொருளாதாரமும், ரியல் எஸ்டேட் ஊக வணிகமும் பலவீனமடைந்தது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்தன.

அதே நேரத்தில் சீனா உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு பெருமளவு முதலீடு செய்தது. தனது பொருளாதார வலிமையை பயன்படுத்தி கச்சா எண்ணெய் தேவைகளை உறுதி செய்து கொண்டது.

கடல்வழி போக்குவரத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் விதமாகவும், நில வழியாக மாற்றுப் பாதையை உருவாக்கும் வகையிலும் “பெல்ட் ரோட் முன்னெடுப்பு” (belt road initiative) என்ற திட்டத்தை அமல்படுத்தியது. பெல்ட் ரோட் முன்னெடுப்பு” திட்டத்தின் கீழ் ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும், பல்வேறு நாடுகளில் துறைமுகங்கள், சாலைகள், ரயில் பாதைகள் அமைப்பதற்கு முதலீடு செய்தது.

மேலும், சூரிய மின்தகடு உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, 5ஜி தொலை தொடர்பு, அதிவேக ரயில் போன்ற உயர் தொழில்நுட்ப துறைகளிலும் அமெரிக்காவுடன் உலகச் சந்தையில் போட்டியிட ஆரம்பித்தது.

இவ்வாறாக, உலக உற்பத்திப் பொருளாதாரத்தின் குவிமையம் சீனாவுக்கு நகர்ந்து விட்டிருந்தது.

மேலும், எரிசக்தித் துறையில் ரசியா சுயேச்சையான சக்தியாக வளர்ந்தது. ரசியா உலகத்திலேயே அதிக இயற்கை எரிவாயு வளத்தைப் பெற்றுள்ளது. கச்சா எண்ணெய் வளத்தில் உலக நாடுகளில் 8-வது இடத்தில் உள்ளது.

ரசியா இயற்கை எரிவாயுவை எடுத்து, குழாய் மூலமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் உக்ரைன் முதலான முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கும் வழங்குகிறது. ஐரோப்பாவுக்கு இயற்கை எரிவாயுவை வழங்கும் குழாய் உக்ரைன் வழியாக செல்கிறது. இதற்காக உக்ரைன் நிலப்பரப்பை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை உக்ரைன் அரசு பெறுகிறது.

2011-ம் ஆண்டு வாக்கில், பால்டிக் கடலுக்கு அடியில் ஜெர்மனிக்கு இயற்கை எரிவாயுவை அனுப்பும் நார்ட் ஸ்ட்ரீம் 1 (Nord Stream1) குழாயை ரசியா தொடங்கி வைத்தது. நார்ட் ஸ்ட்ரீம் 2 (Nord Stream2) கடல்வழி இயற்கை எரிவாயு பாதை 2018-ல் தொடங்கி 2021-ல் முடிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஜெர்மனி முதலான ஐரோப்பிய நாடுகள் தமது எரிசக்தி தேவைகளுக்கு ரசியாவை சார்ந்திருக்கின்றன. அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள வளைகுடா நாடுகள் மீதான சார்பை குறைத்துக் கொண்டுள்ளன.

5. “அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்குவதா”, “உலகை இன்னும் சிறப்பாக கட்டியமைப்பதா”

இவ்வாறாக, அமெரிக்காவின் நிதித்துறை ஆதிக்கத்தையும், எரிசக்தித்துறை கட்டுப்பாட்டையும் அடிப்படையாகக் கொண்ட பொருளாதார மேலாதிக்கம் பலவீனமடைய ஆரம்பித்தது. வெளிநாடுகளில் குறை-கூலி உழைப்பைச் சுரண்டி மூலதனத்தைத் திரட்டும் பாதையில் தடைகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினரின் மத்தியில் காப்புவாதப் போக்கு தோன்றியது.

அவர்களின் பிரதிநிதியாக “அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்குவோம்” (Make America Great Again) என்ற முழக்கத்துடன் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் 2016-ல் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். நிதித்துறை, எரிசக்தித் துறை, சர்வதேச மூலதனம், இராணுவ மேலாதிக்கம் ஆகியவற்றின் மூலம் ஆதிக்கம் செலுத்தும் ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளின்டன் போட்டியிட்டார். தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றியடைந்தார்.

டொனால்ட் டிரம்ப் அதிபர் ஆன பிறகு அமெரிக்காவின் தொழில்துறை அடித்தளத்தை மீட்கப் போவதாக அறிவித்தார்.

“சீனா அமெரிக்க வேலைகளை திருடி விட்டது. உற்பத்தித் துறை வேலைகள் அமெரிக்காவுக்குத் திரும்ப வேண்டும். சீனாவின் மீது வர்த்தகத் தடைகளை விதிக்க வேண்டும்.” என்று சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது இறக்குமதி வரிகளை விதித்து டொனால்ட் டிரம்ப் அரசு.

“சீனா அமெரிக்க தொழில்நுட்பங்களை திருடுகிறது” என்று சீனாவுக்கு அமெரிக்க தொழில்நுட்ப ஏற்றுமதிகளை தடை செய்தது. ஹுவாவெய் (Huawei) போன்ற சீன நிறுவனங்களின் கருவிகளை பயன்படுத்துவதை தடை செய்தது.

100 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி வலுவடைந்த அமெரிக்க மேலாதிக்கத்தின் அடிப்படை அதன் தொழில்துறை அடித்தளத்திலும் தொழில்நுட்ப வல்லமையிலும் உள்ளது. எனவே, அமெரிக்காவின் பொருளாதார அடித்தளத்தை வலுவாக்கி சீனாவை எதிர்கொள்வது என்ற பாதை டொனால்ட் டிரம்ப் பிரதிநிதித்துவப்படுத்தும் போக்கு.

அதே நேரம், “அமெரிக்கா நேட்டோ படைகளுக்கு நிதி ஒதுக்குவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அமெரிக்கா வெளிநாடுகளில் போர்களில் ஈடுபடக் கூடாது, ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் செலவில் ஓசியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. நேட்டோ படைகளுக்கான செலவுகளை பிற நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று அமெரிக்காவின் சர்வதேச இராணுவக் கட்டமைப்பை பலவீனப்படுத்தினார், டொனால்ட் டிரம்ப்.

பசிபிக் பெருங்கடல் நாடுகளின் கூட்டு (Trans-Pacific Partnership – TPP) போன்ற சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றினார். புவிவெப்பமயமாதலை குறைப்பதற்கான ஐ.நா உடன்பாடு அமெரிக்காவுக்கு எதிரானது என்று குற்றம் சாட்டி அதன் பாரிஸ் உடன்படிக்கையிலிருந்து அமெரிக்காவை வெளியேற்றினார்.

இவ்வாறு, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தொடங்கி, 1970-களில் வலுவடைந்து, 1990-களுக்குப் பிறகு முற்றாதிக்கம் செலுத்தி, 2008-க்குப் பிறகு பலவீனமடைந்து வந்த அமெரிக்காவின் சர்வதேச ஏகாதிபத்திய கட்டமைப்பை மேலும் பலவீனமடையச் செய்யும் நடவடிக்கைகளை எடுத்தார்.

அதற்கு மாற்றாக, அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி அடித்தளத்தை வலுவாக்கி, சீனாவுடன் போட்டி போடுவதாக கொள்கைகளை வகுத்தார். அவரது கொள்கைகளுக்கு அமெரிக்க தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியிலும் ஆதரவு இருந்தது.

எனவே, டொனால்ட் டிரம்பின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை சீனாவை மையமாகக் கொண்டு செயல்பட்டது. ரசியாவின் மீதான அழுத்தம் குறைந்தது. ஐரோப்பாவில் ரசியா தனது நிலைமையை வலுப்படுத்திக் கொள்ள முடிந்தது.

ஆனால், அமெரிக்க உலக மேலாதிக்கத்தின் முகவர்களான நிதித்துறை முதலாளிகளும் எரிசக்தித் துறை ஏகபோக நிறுவனங்களும் தமது மேலாதிக்கத்தைத் தக்க வைக்க முயற்சித்தனர். பலவீனமாகிச் செல்லும் எரிசக்தி மேலாதிக்க அரசியல், டொலரை சர்வதேச நாணயமாகக் கொண்ட நிதித்துறை மேலாதிக்கம் இரண்டையும் மீட்டெடுப்பது என்ற பாதையை அவர்கள் பின்பற்றி வந்தனர். அதே பாதையை தொடர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

எரிசக்தித் துறையில் அமெரிக்காவின் முற்றாதிக்கத்துக்கு விடப்பட்ட சவாலை முறியடித்து மீண்டும் பழைய மாதிரியை தொடர்வது இந்தப் பிரிவினரின் தேவையாக இருந்தது. அதன் ஒரு வெளிப்பாடுதான் 2014-ல் உக்ரைனில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பும் ஜோ பைடன் அதில் ஆற்றிய பங்கும்.

இதன் மூலம், இயற்கை எரிவாயு துறையில் ரசியாவின் வலிமையைக் குறைத்து அமெரிக்க ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சித்தது அமெரிக்கா.

ஜோ பைடன் பிரநிதித்துவப்படுத்தும் அமெரிக்க ஆளும் வர்க்கப் பிரிவினர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற தேர்தலில் ரசிய தலையீடு இருந்தது என்று குற்றம் சாட்டினர். டொனால்ட் டிரம்ப் ரசிய கைக்கூலி என்று பிரச்சாரம் செய்தனர்.

இந்த அடிப்படையில் ஜோ பைடன் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளிகளின் தரப்பு, “உலகை இன்னும் சிறப்பாக கட்டியமைப்போம்” (Build Back Better World) என்ற முழக்கத்தின் கீழ் அமெரிக்க பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் சர்வதேச ரீதியில் அமெரிக்காவின் கூட்டணிகளை வலுப்படுத்தும் முயற்சியிலும் தொடங்கியுள்ளது.

டொனால்ட் டிரம்ப் பிரதிநிதித்துவப்படுத்தும் காப்புவாத பாதைக்கும், ஜோ பைடன் பிரதிநிதித்துவப்படுத்தும் இராணுவ, எரிசக்தி வள மேலாதிக்கம், நிதித்துறை மேலாதிக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட பாதைக்கும் இடையேயான மோதல் அமெரிக்க அரசியல் பொருளாதாரத்தின் மையமாக உள்ளது.

2021-ம் ஆண்டில் ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது இரண்டாவது போக்கை வலுப்படுத்தியுள்ளது, சீனாவுடனான வர்த்தகப் பகைமையை தொடரும் அதே நேரத்தில், உக்ரைனில் போர் நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது.

தொடரும்…

உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 3

அப்துல்

க்ரைன் எல்லையில் போர் பதற்றம் உருவாக்கப்பட்டது பற்றியும், அதன் மையமாக இருக்கும் அமெரிக்க உலக மேலாதிக்கத்தைப் பற்றியும் முந்தைய பகுதிகளில் பார்த்தோம்.

இந்தப் பிரச்சினையின் எதிர்க்கூறான, ரசியாவும் உக்ரைனும் என்ன நிலையில் உள்ளன?

1. சோவியத் யூனியனின் உடைவும் அதற்குப் பிந்தைய ரசியாவும்

1991-ல் சோவியத் யூனியன் உடைந்து ரசியா, உக்ரைன், பெலோருஸ், மால்டாவியா (ஐரோப்பிய குடியரசுகள்), ஜார்ஜியா, உஸ்பெக், கசக், அஜர்பைஜான், கிர்கிஸ், தஜிக், ஆர்மீனியா, டர்க்மென், (மத்திய ஆசிய குடியரசுகள்) லித்துவேனியா, லத்வியா, எஸ்டோனியா (பால்டிக் குடியரசுகள்) ஆகிய 15 சோசலிச குடியரசுகளும் தனித்தனி நாடுகளாக பிரிந்தன.

ஆனால், ரசியாவிலும், உக்ரைனிலும், பிற முன்னாள் சோவியத் குடியரசுகளிலும் முதலாளித்துவ கும்பல்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றின. இந்த நாடுகளின் பொருளாதாரங்களில் முதலீடு செய்து கொள்ளை இலாபம் ஈட்டுவதற்காக முதலாளித்துவ கும்பல்களுடன் அமெரிக்காவும் பிற ஏகாதிபத்திய நாடுகளும் ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டன. முன்னாள் சோவியத் குடியரசுகள் அனைத்திலும் பொருளாதார வீழ்ச்சியும், அரசியல் நெருக்கடிகளும், சமூகக் குழப்பமும் தலைவிரித்து ஆடின.

ஆனால், 2000-ம் ஆண்டில் ரசியாவில் விளாடிமீர் புட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 20 ஆண்டுகளில் 8 ஆண்டுகள் அதிபராகவும் அடுத்த 4 ஆண்டுகள் பிரதமராகவும், மீண்டும் அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். ரசியாவின் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வளங்களையும், அணு ஆயுதங்களையும், ஆயுத உற்பத்தித் தொழிலையும் உந்துதலாகக் கொண்டு ரசிய முதலாளித்துவ நலனை உலகச் சந்தையில் நிலைநாட்ட ஆரம்பித்தார்.

ரசியாவின் பொருளாதார அடித்தளமாக இருப்பது எண்ணெய் மற்றும் எரிவாயு வளம். ரசியாவிலிருந்து இறக்குமதியாகும் எரிவாயு மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு குழாய் மூலம் வழங்கப்படுகிறது. ரசியாவிலிருந்து அதிக அழுத்தம் கொண்ட குழாய்களின் மூலம் மேற்கு மற்றும் தெற்கு ஐரோப்பாவுக்குச் செல்லும் ஐந்து பெரும் எரிவாயுக் குழாய்கள் பெலாரஸ், உக்ரைன் முதலான முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளின் வழியாகவே செல்கின்றன.

எனவே, இந்த முன்னாள் சோவியத் குடியரசுகளை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவது அமெரிக்காவுக்கு அவசியமாக உள்ளது. அதன் மூலம் ரசியாவை பலவீனப்படுத்தி ஏகபோக மூலதனத்தை விரிவாக்கி ரசியாவுக்குள்ளும் ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கா முயற்சிக்கிறது. குறிப்பாக, எரிசக்தித் துறையில் தனது மேலாதிக்கத்தைத் தொடர்வதற்கு ரசியாவின் எண்ணெய் வளங்களை கைப்பற்றி கட்டுப்படுத்துவது அமெரிக்காவுக்கு அவசியமாக உள்ளது.

இதன்படி, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்க தலைமையிலிருக்கும் இராணுவக் கூட்டமைப்பான நேட்டோவும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும், முன்னாள் சோவியத் குடியரசுகளையும் ஒவ்வொன்றாக தம்முள் இழுக்க ஆரம்பித்தன. ரசியாவை தனிமைப்படுத்த முயற்சித்தன. போலந்து, லித்துவேனியா, லட்வியா, எஸ்டோனியா, செக் குடியரசு, ஸ்லோவேகியா, ஸ்லோவேனியா, ஹங்கேரி, ரொமேனியா, பல்கேரியா ஆகிய நாடுகள் மேற்கத்திய பொருளாதார, இராணுவ மண்டலங்களுக்குள் கொண்டு வரப்பட்டன.

இவ்வாறு, அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய கட்டமைவு எரிசக்தி வளத்தை கட்டுப்படுத்தவதை உறுதிப்படுத்துவதற்கான கொள்கையின் அடுத்த இலக்காக இருந்தது உக்ரைன்.

2. முதலாளித்துவ குடியரசாக உக்ரைன் எதிர்கொண்ட பேரழிவுகள்

உலகின் மிக வளமான விவசாய பகுதிகளில் ஒன்றான உக்ரைன் ரசியாவை ஒட்டிய ஸ்லேவிய நாடுகளில் ஒன்று. அதன் நிலப்பரப்பு தமிழ்நாட்டைப் போல சுமார் ஐந்து மடங்கு பெரியது. அதன் மக்கள்தொகை தமிழ்நாட்டு மக்கள் தொகையில் பாதிக்கும் சற்று அதிகமாக மட்டுமே உள்ளது (சுமார் 4.8 கோடி) . ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது அளவில் பிரான்ஸ் நாட்டை விட பெரியதாகவும், ஜெர்மனியின் மக்கள் தொகையில் பாதியையும் கொண்டிருக்கிறது.

உலக அளவில், 7 சதவீதம் முதல் 14 சதவீதம் புராதன உயிர்ச்சத்து அடங்கியிருக்கும் செர்னோஜெம் என்ற கருநிற மண் வகையின் மூன்றில் ஒரு பகுதி உக்ரைனில் உள்ளது. இந்த வகை மண் பெருமளவு ஊட்டச் சத்துக்கள் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், உயர் நீர்த் தேக்கத் திறனும் கொண்டது. சோவியத் சோசலிச குடியரசுகளின் தானியம், இறைச்சி, பால், காய்கறிகள் உற்பத்தியில் 25% பங்களித்து வந்த உக்ரைன் சோவியத் யூனியனின் உணவுக் களஞ்சியம் என்று அழைக்கப்பட்டது.

சோவியத் யூனியனின் உணவுக் களஞ்சியமாக விளங்கிய உக்ரைனில் ஆயுதத் தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளும், சுரங்க மற்றும் தொழில்துறையில் பயன்படும் கருவிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் செழித்திருந்தன.சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, சுதந்திர குடியரசாக அறிவிக்கப்பட்ட பிறகு, உக்ரைன் மக்கள் முதலாளித்துவ சிறுகும்பலால் சூறையாடப்பட்டனர். அவர்கள் நாட்டின் சொத்துக்களையும் வளங்களையும் தனியார்மயமாக்கி கொள்ளை இலாபம் குவித்தனர்.

உக்ரைன் தனிநாடான அடுத்த பத்தாண்டுகளில் அதன் ஜிடிபி 60% வீழ்ச்சியடைந்தது. 2000 ஆண்டுக்குப் பிறகு ஏற்றுமதி சார்ந்த பொருளாதார வளர்ச்சி சிறிதளவு ஏற்பட்டாலும், உலகளாவிய நிதி நெருக்கடியின் தாக்கத்தால் 2009-ம் ஆண்டு உக்ரைனின் பொருளாதாரம் 15% சுருங்கியது. வரலாற்று ரீதியாக சோவியத் சோசலிச குடியரசாக சாதித்த உச்சகட்ட ஜிடிபி அளவை உக்ரைன் மீண்டும் அடையவேயில்லை.

21-ம் நூற்றாண்டில், விளாடிமீர் புட்டினின் ரசிய ஆதரவு அரசு, ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு அரசு என்று மாறி மாறி அதிகாரத்துக்கு வந்த அரசுகள் முதலாளித்துவ கும்பல்களின் பொருளாதார சூறையாடலுக்கு பின்புலமாக இருந்தன.

2004-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட விக்டர் யனுகோவிச் ரசியாவுடன் நெருக்கமான உறவுகளை ஆதரிப்பவர். ஆனால், தேர்தலில் மோசடி நடந்ததாக தெருப்போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவர் பதவியிலிருந்து கீழ் இறக்கப்பட்டார்.

பின்னர் நடந்த மறுவாக்கெடுப்பில் எதிர்த்துப் போட்டியிட்ட “நமது உக்ரைன்” கட்சியைச் சேர்ந்த ஐரோப்பிய சார்பு விக்டர் யுஷென்கோ ஆட்சியில் அமர்த்தப்பட்டார். அவர் உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நெருக்கமாக இணைக்க முயற்சித்தார். ரசியாவின் எதிர்ப்புகளை மீறி அமெரிக்காவுடனும் ஐரோப்பிய நாடுகளுடனும் ஒப்பந்தங்களை போட முயற்சித்தார்.

ஆனால், 2010-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் விக்டர் யனுகோவிச் மீண்டும் அதிபரானார். ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தம் உக்ரைன் நலன்களுக்கு எதிரானதாக இருப்பதாகச் சொல்லி அது தொடர்பான பேச்சு வார்த்தைகளை அதிபர் விக்டர் யனுகோவிச் முறித்துக் கொண்டார்.

அதே நேரம், உக்ரைனிய முதலாளித்துவ சிறுகும்பல் ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உக்ரைன் மக்களை கிளர்ந்தெழச் செய்தது. அரசு நிர்வாகத்தில் நிலவிய மோசமான ஊழலை எதிர்த்து மக்கள் அணி திரட்டப்பட்டனர்.

3. 2014-ல் உக்ரைனில் நடத்தப்பட்ட ஒரேஞ்சு புரட்சி

உக்ரைனின் தலைநகர் கீவ் நகரத்தில் தெருப் போராட்டங்கள் தொடங்கின. ஐரோப்பிய ஆதரவு எதிர்க்கட்சிகள் தரப்பில் பாசிச கட்சிகளான ஸ்வோபோடா, டிரிசுப் போன்ற வலதுசாரி பயங்கரவாத குழுக்களும் போராட்டங்களில் சேர்க்கப்பட்டிருந்தன. இந்த அமைப்புகள் உக்ரைனிய இனவாதத்தை முன் வைப்பவை. யூதர்களுக்கும் ரசியர்களுக்கும் எதிரான இன வெறுப்பை உமிழ்பவை; புதிய நாஜி கொள்கைகளை பிரச்சாரம் செய்பவர்கள்.

ஒரேஞ்சு புரட்சி நடத்திய அமைப்புகளின் தொண்டர்கள், தலைநகர் கீவ் நகரின் “சுதந்திர மைதானத்தை” ஆக்கிரமித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்; அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டனர்; கலவர எதிர்ப்பு போலீசை, பெட்ரோல் வெடிகுண்டு, துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்களால் தாக்கினர்.

2014-ல் உக்ரைன் தலைநகரம் கீவ் நகரில், “மைதான்” என்று அறியப்பட்ட சுதந்திர சதுக்கத்தில் அரசு எதிர்ப்பாளர்களின் நாசவேலைகள்.

போராட்டக்காரர்களுக்கு மேற்கத்திய நாடுகளிடம் இருந்து பணமும் ஆயுதங்களும் தடையின்றி வழங்கப்பட்டது. போராட்டக்காரர்கள் கட்டவிழ்த்து விட்ட வன்முறை கலவரங்களில் 88 பேர் கொல்லப்பட்டனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்புப் பிரதிநிதி சீமாட்டி ஆஸ்டன், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜான் மெக்கெய்ன், ஐரோப்பிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணைச் செயலர் விக்டோரியா நியூலாண்ட் ஆகியோர் போராடும் கும்பல்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

“இருதரப்பிலும் கொல்லப்பட்டவர்களில் பலர் அரசு படையினரால் கொல்லப்படவில்லை, மாறாக எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்த தொலைதூர துப்பாக்கி குறியர்களால் (ஸ்னைப்பர்கள்) இறந்தார்கள்” என்ற தகவல், ஐரோப்பிய ஆதரவு எஸ்டோனிய வெளியுறவுத் துறை அமைச்சர் உர்மாஸ் பேட், சீமாட்டி ஆஸ்டனிடம் பேசும் தொலைபேசி உரையாடல் மூலம் அம்பலமானது.

தொடர்ச்சியான உள்நாட்டு குழப்பத்தின் காரணமாக விக்டர் யனுகோவிச் ஆட்சி கவிழ்க்கப்பட்டது, அவர் ரசியாவுக்கு தப்பிச் சென்றார். உக்ரைனில், மேற்கத்திய ஆதரவுடன் இடைக்கால அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டது.

4. மேற்கத்திய ஆதரவு இனவாத அரசும், பிரிந்து சென்ற ரசிய பகுதிகளும்

2012-ம் ஆண்டு இயற்றப்பட்ட சிறுபான்மை இனத்தவருக்கும், மொழியினருக்கும் பாதுகாப்பு அளிக்கும் சட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தது, உக்ரைன் அரசு. அதன்படி இனிமேல் உக்ரைனிய மொழி மட்டுமே நாட்டின் ஆட்சி மொழியாக இருக்கும்.

தேசிய சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும், நாட்டை மேற்கத்திய நாடுகளின் பிடியில் ஒப்படைக்கும் இந்த நடவடிக்கைகளை நாட்டின் தெற்கு, தென்கிழக்கு பகுதிகளில் ரசிய மொழி பேசும் மக்கள் கடுமையாக எதிர்த்தனர்.

உக்ரைனின் தென்கிழக்கில் உள்ள 15 லட்சம் ரசிய மொழி பேசும் மக்கள் வாழும் கிரீமியா தீபகற்பம் 1954-ம் ஆண்டு அப்போது சோவியத் குடியரசாக இருந்த உக்ரைனுடன் சேர்க்கப்பட்டிருந்தது. 1990-களில் சோவியத் யூனியன் வீழ்ந்து ரசியாவும், உக்ரைனும் தனி நாடுகள் ஆன பிறகு 1997-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி கிரீமியாவில் அப்போது இருந்த கருங்கடல் பகுதி கப்பற்படையில், 82% ரசியாவிடம் ஒப்படைக்கப்பட்டு, செவஸ்தபோல் துறைமுகம் ரசியாவின் பயன்பாட்டில் விடப்பட்டது. அதற்கு பதிலாக உக்ரைனுக்கு நிதி உதவி, கடன் தள்ளுபடி ஆகியவற்றை ரசியா வழங்கியது. செவஸ்தபோல் துறைமுகத்துக்கான பயன்பாட்டுக் கட்டணத்தையும் ரசியா செலுத்தி வந்தது.

சுயஆட்சிப் பிரதேசமான கிரீமியா, மேற்கத்திய ஆதரவு இடைக்கால அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தது: உக்ரைனிலிருந்து பிரிந்து ரசியாவில் இணைவதற்கான கருத்துக் கணிப்பை நடத்தி ரசியாவுடன் இணைவதாக அறிவித்தது.

கிரீமியாவின் மக்கள் உக்ரைனில் இருந்து பிரிவதாக பெருவாரியாக வாக்களித்தனர். கிரீமிய நாடாளுமன்றம் ரசியாவுடன் இணைக்கும்படி தீர்மானம் நிறைவேற்றியது (2014)

இதைத் தொடர்ந்து, உக்ரைனின் கிழக்கு எல்லையில் உள்ள டான்பாஸ் பகுதியில் உள்ள டோனட்ஸ்க், லுகான்ஸ்க் என்ற 2 மாகாணங்கள் உக்ரைனில் இருந்து பிரிந்து போவதாக அறிவித்தன.

5. தாராளவாத முதலாளித்துவ சொர்க்கத்தில் உக்ரைன் எதிர்கொண்ட பொருளாதார தாக்குதல்கள்

2014-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் மேற்கத்திய ஆதரவு பெட்ரோ பொரோஷெங்கோ வெற்றி பெற்றார். ரசியாவுடனான உறவுகளை துண்டித்துக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்துடனும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய கட்டமைப்புடனும் நெருக்கமாகும் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டன.

ரசியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு இயற்கை எரிவாயு வழங்குவதைத் தடுப்பதற்கு அமெரிக்கா உக்ரைன் அரசை பயன்படுத்தியது. ரசியாவைச் சார்ந்திருப்பதிலிருந்து மேற்கத்திய நாடுகளை சார்ந்திருகுகம்படி உக்ரைன் மறுசீரமைக்கப்பட்டது. உக்ரைனின் பொருளாதார மறுசீரமைப்புக்காக அமெரிக்கா தலைமையிலான நிதி நிறுவனங்கள் கடன் உதவி அளித்தன.

பெட்ரோ பொரோஷெங்கோ அரசு ஐஎம்எஃப்-யிடம் நிதி உதவி பெறுவதற்கு விண்ணப்பித்தது. வரிகளை ஜிடிபியில் 0.5% அளவுக்கு உயர்த்துவது, எரிசக்திக் கட்டணங்களை உயர்த்துவது, ஓய்வூதியத்துக்கு தொழிலாளர்களின் பங்களிப்பை அதிகரிப்பது ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. 2014-ல் ஜிடிபியில் 20% ஆக இருந்த சமூக நல செலவினங்கள் 2022-ல் 13% ஆக வெட்டப்பட்டன.

அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, வங்கிகளில் அரசின் பங்கு உடைமையைக் குறைப்பது ஆகியவற்றையும் ஐ.எம்.எஃப் நிபந்தனைகளாக விதித்துள்ளது. 2025-க்குள் வங்கிகளில் அரசு பங்குடைமையை 25% ஆகக் குறைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நிறுவனங்களுக்கு உக்ரைன் சந்தை திறந்து விடப்பட்டது, உக்ரைனின் வளமான விவசாய நிலங்களை பன்னாட்டு நிறுவனங்கள் குறி வைத்தன.

விவசாய நிலங்களை வாங்குவதற்கு லாபகரமான 10 நாடுகளில் உக்ரைன் ஒன்று என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் முதல் இடம் வகிக்கிறது, உக்ரைன். கோதுமை உற்பத்தியில் 4-வது பெரிய நாடாக உள்ளது. சுமார் 30% மக்கள் இன்னும் கிராமப் புறங்களில் வசிக்கின்றனர். 14% உழைப்பாளர்கள் விவசாயத்தில் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.

உக்ரைனில் விளைநிலங்களை அன்னிய நிறுவனங்கள் வாங்குவது தடை செய்யப்பட்டிருந்தாலும், உக்ரைனிய நிறுவனங்கள் 10,000 ஹெக்டேர் (25,000 ஏக்கர்) வரை நிலம் வாங்க அனுமதிக்கப்பட்டன. இதன் மூலம் 4.27 கோடி ஹெக்டேர் (சுமார் 10.3 கோடி ஏக்கர்) நிலம் தனியார் வர்த்தகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இது இத்தாலி நாட்டின் நிலப்பரப்புக்கு சமமானது.

6. உக்ரைன் பொருளாதாரத்தின் வீழ்ச்சியும் மக்களின் வாழ்நிலை நெருக்கடியும்

இதற்கிடையில், பெட்ரோ பொரோஷெங்கோ ஆட்சியில் ரசியாவுடன் மோதல் தீவிரமடைந்தது. உள்நாட்டில் இனவாத கொள்கைகள் அமல்படுத்தப்பட்டன. புதியதாராளவாத கொள்கைகள் மூலம் மக்கள் வாழ்க்கை மேலும் நெருக்கடியை எதிர்கொண்டது.

உக்ரைனில் சராசரி வருடாந்திர உண்மைக் கூலி 1990-ல் சுமார் 22,000 மட்டத்திலிருந்து வீழ்ச்சியடைந்து, 2019 வாக்கில் 19,000 அளவில் உள்ளது. அதாவது, சோவியத் சோசலிச குடியரசில் இருந்த கூலி மட்டத்தை விட இப்போதைய சராசரி கூலி சுமார் 13% குறைவாக உள்ளது.

உக்ரைனில் பணக்கார 10% பேர் மிக ஏழ்மையான உக்ரைனியர்களை விட 40 மடங்கு அதிக செல்வத்தைக் கட்டுப்படுத்துகின்றனர். உக்ரைன் மக்களிடையை வேலையின்மை வீதம் 10% ஆக உயர்ந்தது.

7. நகைச்சுவை நடிகர் விளாடிமைர் செலன்ஸ்கியும் அமெரிக்க அரசியல் முரண்பாடும்

இந்நிலையில், பெட்ரோ பொரோஷென்கோ அரசு மக்கள் ஆதரவை இழந்தது. ஏப்ரல் 2019-ல் நடந்த அதிபர் தேர்தலில் மேற்பத்திய ஆதரவு பெட்ரோ பொரோஷெங்கோ தோற்கடிக்கப்பட்டார். அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட நகைச்சுவை நடிகரான விளாடிமைர் செலன்ஸ்கி ரசியாவுடன் மோதலை முடித்து அமைதி ஏற்படுத்தப் போவதாகவும், உக்ரைனின் கிழக்கில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதாகவும் வாக்களித்திருந்தார்.

அந்த நேரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவுக்கு எதிரான வர்த்தகப் போரை முழு வீச்சில் தொடங்கி நடத்திக் கொண்டிருந்தார். டொனால்ட் டிரம்ப் பிரநிதித்துவப்படுத்தும் அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் பிரிவு, “அமெரிக்கா முதலில்” என்ற கொள்கையை முன் வைத்து அமெரிக்காவின் வெளிநாட்டுச் செலவுகளை குறைக்க வேண்டும் என்று வாதிட்டனர். எனவே, எரிசக்தித் துறையில் ரசியாவுக்கு எதிரான அமெரிக்க செயல்பாடுகள் ஒப்பீட்டளவில் மட்டுப்பட்டன. எனவே, உக்ரைன் அரசும் ரசியாவுடன் உடன்பாடு ஏற்படுத்தும்படி கூறப்பட்டது.

ஆனால், 2021-ல் ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற பிறகு, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டது. எரிசக்தித் துறையில் அதிகரித்து வரும் ரசிய செல்வாக்கைக் குறைப்பது ஜோ பைடன் பிரதிநித்துவப்படுத்தும் உலக மேலாதிக்க அரசியலுக்கு அவசியமாக இருந்தது. ரசியாவும் ஐரோப்பிய நாடுகளும் எரிசக்தி வளங்களை வர்த்தகம் செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் நாணயமாக யூரோவை பெருமளவு பயன்படுத்த ஆரம்பிப்பதன் மூலம் அமெரிக்க டொலரின் உலகளாவிய மேலாதிக்கமும் பலவீனப்படும்.

அதைத் தடுப்பதும் ஜோ பைடனின் அரசியல் பொருளாதாரக் கொள்கைக்கு அடிப்படையாக உள்ளது.

மறுபுறம், பொருள் உற்பத்தித் துறையிலும், உயர்தொழில்நுட்பத் துறையிலும் சீனாவுடன் போட்டி போடுவதிலும் அமெரிக்கா மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்கிறது. ஆப்பிரிக்காவிலும், தென் கிழக்கு ஆசியாவிலும், தென் அமெரிக்காவிலும் சீனாவின் பொருளாதார செல்வாக்கு அதிகரிப்பதை அமெரிக்காவால் தடுத்த நிறுத்த முடியவில்லை.

இதற்கிடையில், நிதித்துறை, எரிசக்தித் துறை முதலாளிகளின் தரப்பில் அமெரிக்கா உலகெங்கும் நடத்தும் குற்றச் செயல்கள் அமெரிக்க உழைக்கும் மக்களின் கடும் அதிருப்தியை சம்பாதித்துள்ளது. அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்களும், ஏகாதிபத்திய கொள்கையும் உள்நாட்டில் கீழ்மட்ட 50% மக்கள் மீது கடும் பொருளாதார சுமையை சுமத்தியுள்ளது.

இவ்வாறு, முதலாளித்துவத்தின் தீர்க்கமுடியாத முரண்பாடுகளின் ஏகாதிபத்திய பரிணாம வடிவத்தில் அமெரிக்கா சிக்கிக் கொண்டுள்ளது. அதிலிருந்து வெளியில் வருவதற்கும் உள்நாட்டு நெருக்கடியை சமாளிப்பதற்கும் போரை தூண்டுவது அமெரிக்காவுக்கு அவசியத் தேவையாக உள்ளது. தோற்றுப் போன உலக முதலாளித்துவக் கட்டமைப்பின் இன்னும் ஒரு பலியாடாக உக்ரைன் மக்களின் வாழ்வு சீரழிக்கப்படுகிறது.

உக்ரைனில் மட்டுமின்றி, உலகெங்கும் உள்ள செல்வங்களை எல்லாம் உற்பத்தி செய்யும் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் நெருக்கடிக்குள் தள்ளுகிறது, இந்த முதலாளித்துவக் கட்டமைப்பு. இயற்கை வளங்களை இலாப நோக்கத்திற்காக சூறையாடுகிறது, இயற்கை வளங்களை கைப்பற்றி கட்டுப்படுத்துவதற்கான போட்டியில் போர்களில் இறங்குகிறது. ஏராளமான செல்வங்களை ஆயுத உற்பத்தியிலும், நிதித்துறை சூதாட்டத்திலும் வீணாக்குகிறது.

உழைக்கும் மக்கள் உணர்வுரீதியாக திட்டமிட்டு சமூக உற்பத்தியையும் சமூக வாழ்வையும் ஒழுங்குபடுத்தும் அமைப்புக்கு மாறிச் செல்ல வேண்டிய அவசியத்தை இத்தகைய நெருக்கடிகள் மேலும் வலியுறுத்துகின்றன.

முற்றும்.